Thursday, December 23, 2010

ஞானோதயம்

ஞானோதயம்

இன்னும் சிலருக்காவது
நல்லது செய்திருக்கலாமோ?
மனதின் ஞானோதயம்
பயனற்றுப் போனது
மரணத் தருவாயில்.

உடைந்த உளி

சிற்பியின் கையில்
உடைந்த உளி...
எனது கவிதை கருவிற்கு
கிடைக்காத வார்த்தைகள்.

சொல்லிச் சென்றது

பிரிந்த காதலியின்
ஒற்றைப் பார்வை
சொல்லிச் சென்றது
காதலின் போலித்தனத்தை

ஒற்றை ரூபாய்க்கு கையேந்தும்
பிச்சைக்காரனின் குரல்
சொல்லிச் சென்றது
மறந்து விட்ட எனது
மனிதாபிமானத்தை

என்னால் நடந்துவிட்ட
தவறுக்காக
நான் கேட்காமல் விட்ட மன்னிப்பு
சொல்லிச் சென்றது
மறந்துவிட்ட அடிப்படை நாகரிகத்தை


மொத்தத்தில்
இவை அனைத்தும் எனக்கு
சொல்லிச் சென்றது
மாறிவிட்ட மனித இயல்பை.


-

Thursday, December 16, 2010

மெளனமும் நட்பும்

மெளனமும் நட்பும்

ஏதேதோ சொல்ல வேண்டும்
என்று தோன்றும் தருணங்களில்
மெளனம் வந்து காப்பாற்றி விடுகிறது
எங்கள் நட்பை.

நிலையில்லா மனது

கல்லூரி நாட்களில் பார்த்துப் பார்த்து
உருகிய பெண்
அவளின் திருமணச் செய்தி கேட்டு
உறங்காமல் கிடந்த நாட்கள்...
சில வருடங்களுக்குப் பின் பேருந்துப் பயணத்தில்
அவள் வீடு கடக்கையில் எழுந்த
இனம் புரியாத உணர்வை
கலைத்துச் சென்றாள்
அடுத்த நிறுத்தத்தில் ஏறிய
தாவணிப் பெண்.

உதிர நினைக்கும் இலை

இலையுதிர் காலத்திற்காய்
ஏங்கும் இலை...
வாழ்ந்து கெட்டவனின்
இறுதிக்கால வாழ்க்கை.


வழி தெரியவில்லை

எவ்வளவு சொல்லியும் மனது
சமாதானமடையவில்லை
என் கற்பனைக்கு அகப்படாத வரிகளை
அடுத்தவரின் கவிதையில்
படிக்கும் போது.


-

Tuesday, November 23, 2010

சிதறிக்கிடக்கும் கவிதைகள்

சிதறிக்கிடக்கும் கவிதைகள்

உன் கூந்தலில் இருந்து உதிர்ந்த
ஒற்றைப் பூ
நீ கடித்துத் துப்பிய
விரல் நகம்
பதித்துச் சென்ற 
உன் பாதச் சுவடுகள்
என வழியெங்கும் சிதறிக்கிடக்கும்
கவிதைகள்
உறுதிப்படுத்துகின்றன
நீ வந்து சென்றதை.

கருப்பொருள்

ஒரு கவிதை எழுத நினைத்து
ஆரம்ப வரி தேடி அலுத்துவிட்டது
வேறு வழியில்லை
மீண்டும் உன்னிடமே தஞ்சம்.

என்னென்று சொல்ல

வார்த்தைகள் மாறி மாறி நின்று 
களைப்படைந்தன
உன் அழகை
வரையறுக்க முயன்று
காலம் முன்பின்னாக நகர்ந்து
சோர்ந்து போனது
உனக்கு இணையான அழகைத் தேடி
இப்படி இருக்க
உன்னவள் அழகா என்று கேட்பவரிடம்
ஒரு வார்த்தை பதிலாய்
என்னென்று சொல்ல!


-

Tuesday, July 27, 2010

பிரிவு

பிரிவு


'ஏக்கம்'
'எதிர்பார்ப்பு'
'மகிழ்ச்சி '
'துக்கம்'
உன்னால் மட்டுமே
இவ்வார்த்தைகளின்
முழுமையான பொருளுணர்ந்தேன்
இன்னும் ஒரு வார்த்தை
மிச்சம் இருக்கிறது
'மரணம்'

************************************

ஒரு துளி

உதிர்ந்த தண்ணீர்
தனக்குள் ஏற்றுக் கொண்ட பிம்பத்தை
உண்ண முடியாமல் துப்பிய மிச்சமாய்
மீண்டும் ஒரு துளி.

************************************

அது போதும்...

காற்றாக உன் இதையத்தில் நிறைய வேண்டும்
கண்ணோடு கண் பார்த்து கரைய வேண்டும்
காலம் அத்தோடு உறைய வேண்டும் 
அது போதும்... அது போதும்...

உன்னால் என் வாழ்க்கை மலர வேண்டும்
அன்றி இக்கணம் என்னுயிர் உதிர வேண்டும்
உதிர்கின்ற நேரம் உன் முகம் பார்க்க வேண்டும்
அது போதும்... அது போதும்...


-

Thursday, July 1, 2010

மதில் மேல் பூனை

மதில் மேல் பூனை

நிற்கும் மதில் தாண்ட விரும்பி
இடமா வலமா குழம்பி
ஏதோ ஒரு பக்கம்
குதித்த பின்புதான் தெரிந்தது
குதித்த இடம்
ஒரு மதில் என்று .


தீதும் நன்றும்

என் விரல் வளர்த்த நகங்கள்
என் உடல் கிழிப்பது கண்டு
கை கொட்டும் விரல்கள்
தங்கள் நகம் மறந்து.

பழக்கமில்லாத கனவு

வண்ணம் தீட்டிய கம்பிகளுக்கிடையில்
சுருண்டிருந்த புலி ஒன்று
கனவு கண்டு திடுக்கிட்டது
தான் காட்டிற்குள் வேட்டையாடுவதாய்.

-

Tuesday, June 22, 2010

கானல் நீர்

படிக்கப் படாத கவிதை புத்தகம்
மழை பார்க்க திறந்த ஜன்னல்
முகம் வருடும் குளிர் காற்று
சுகமான சாய்வு நாற்காலி
பசி அடங்கிய பின் மதியம்
குளிருக்கு இதமாய் கோப்பை தேநீர்
படித்த வரியை கண்மூடி ரசிக்க அமைதி

வாழ்க்கைப் புத்தகத்தின்
அடிக்கோடிட்ட வரியாய்
ஒரு நாள்

வரும் ஞாயிறாவது கிட்டுமா
இவை அனைத்தும்
ஏக்கத்தோடு மனது
அலுவலக வேலைக்கிடையில்.

-

Friday, June 18, 2010

ஆயிரம் பிறை கண்ட கண்கள்

ஒன்றை இழந்தால் தான் மற்றொன்று கிடைக்கும். ஆம், நாம் நமது வயதை இழந்து அனுபவத்தைப் பெற்றுக் கொண்டிருக்கிறோம். நமது தாத்தா, பாட்டிகளிடம், நம்மிடம் இதுவரை சொல்லாத எத்தனையோ அனுபவக் கதைகள் அவர்கள் மனதில் புதையுண்டு கிடக்கின்றன.

மரத்தின் வயது ஏற ஏற அதிகரிக்கும் வளையங்கள் போல மனிதர்களின் தோல்களிலும் சுருக்கங்கள் வயதிற்கேற்ப அதிகரிக்கின்றன. உடல் வலு இழக்கிறது, ஞாபக சக்தி குறைகிறது, உடல் கலைத்து ஓய்வு தேடுகிறது. நடப்பதற்கும், சாப்பிடுவதற்கும் மற்ற அன்றாட செயல்களுக்கு பிறரின் உதவி தேவைப்படுகிறது.

குழந்தையின் சிரிப்பில் மட்டுமல்ல முதுமையின் சிரிப்பிலும் இறைவனைக் காணலாம். எண்பது வயதுக்கு மேல் மனிதன் மீண்டும் குழந்தையாகத் துவங்குகிறான். பிறர் உதவி இன்றி தனித்து செயல்பட முடிவதில்லை.

எல்லோரும் இளமையாக இருக்க நினைப்பதை தவிர்க்க முடியவில்லை. அதற்கான முனைப்பு இல்லாதவர்களை பார்ப்பது அரிது. நரைக்கும் முடிக்கு சாயம் பூசி, விழுந்துவிட்ட பல்லுக்கு பொய்பல் கட்டி எப்படியாவது இளமையை தங்க வைத்துக் கொள்ள முயல்கிறார்கள்.

வயதானவர்கள் உலகத்தின் வாழ்க்கையை வேறு மாதிரியாகப் பார்க்கிறார்கள். அவர்கள் பார்வையில் உலகம் தன்னை அன்னியப் படுத்திவிட்டதாகவே உணர்கிறார்கள்.

பதின் வயதுகளில் பள்ளி கோடை விடுமுறை நாட்களில் தாத்தா இருக்கும் ஊருக்கு சென்று தங்குவது வழக்கம். அதுவும் கிராமம். அங்கே எங்கள் வீட்டு இரும்பு கேட்டிற்கு முன் ஊர் பஞ்சாயத்து டி.வி. இருக்கும். அமர்ந்து பார்பதற்கு கொட்டகை போன்ற அமைப்பில் தூண்கள் நிறுத்தி கூரை வேய்ந்திருப்பர். மாலை ஏழு மணிக்கு மேல்தான் டி.வி. பார்க்கவே ஆரம்பிப்பார்கள். அதுவரை, பகல் வேளைகளில் ஊரில் இருக்கும் வயதானவர்கள் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பார்கள். அந்த இடத்திற்கு சோம்பேறி மடம் என்றே பெயர். வயதானவர்கள் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் இடத்திற்கு எதற்கு சோம்பேறி மடம் என்று பெயர் வைத்தார்கள் என்று தெரியவில்லை. முதிர்ந்த வயதில் ஓய்வாக அமர்ந்திருப்பது சோம்பேறித்தனமா என்ன?

பகல் வேளையில் அங்கு அமர்திருப்பவர்கள் பெரும்பாலும் அறுபது வயதுக்கு மேல் உள்ளவர்களாகத்தான் இருப்பார்கள். பேசிக்கொண்டோ , தாயம் அல்லது பதினைந்தாம் கரம் விளையாடிக் கொண்டோ அவர்களுடைய பகல் மெதுவாகவே நகரும். அவர்களுடைய விளையாட்டிலும் அவ்வளவு சுவாரஸ்யம் இருக்காது. ஜெயிப்பது பற்றியோ தோற்றது பற்றியோ கவலை இருக்காது. அவர்களுக்குத் தேவை நேரம் செல்ல வேண்டும், அவ்வளவுதான்.

சில நாட்கள் நான் அங்கு சென்று அமர்ந்திருப்பது உண்டு. அங்கு ஒரு தாத்தா தினமும் வருவார், எண்பத்தைந்து வயதுக்கு மேல் இருக்கும். ஆயிரம் பிறை கண்ட கண்கள், தலையிலிருந்து புருவம் வரை அனைத்து முடிகளும் நரைத்து வயதிற்கு கட்டியம் கூறிக் கொண்டிருக்கும். தடி ஊன்றி மெல்ல நடந்து வருவார். அதிகம் பேச மாட்டார், மற்றவர்கள் பேசுவதையும் வருவதையும் போவதையும் வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருப்பார். யாராவது கேள்வி கேட்டாலோ, பேச்சு கொடுத்தாலோ ஓரிரு வார்த்தைகள் பேசுவார்.

அப்பொழுது இதையெல்லாம் பார்த்தபடி சிறிது நேரம் அமர்ந்திருப்பேன். பின்பு அதற்க்கு மேல் அங்கு சலிப்புற்று வீட்டிற்க்கு வந்து விடுவேன். இப்பொழுது யோசித்துப் பார்க்கும் பொழுது அந்த பெரியவர்கள், அவர்களின் நடவடிக்கைகள் எல்லாம் அப்படியே கண்முன் நிற்கிறது.

இளமை காலத்தில் ஓயாமல் பேசிய வாய் ஏன் இன்று மெளனத்தை தரித்துக் கொண்டிருக்கின்றன. உலகத்தின் பரபரப்பான நிகழ்வுகளில் இருந்து உடற்சோர்வு அவர்களை தனிமைப் படுத்தி விட்டதோ. கண் பார்வை மங்கி, கேட்கும் திறன் குறைந்து, அதீத ஞாபக மறதியுடனான வாழ்க்கை பிடிப்பற்றதாகி விடுகிறதோ.

அவர்கள் எந்த ஒரு செயலையும் தம் இளமை காலத்தோடு ஒப்பிட்டுப் பார்பதாகவே தோன்றுகிறது. நம்முடைய செயல்களைப் பார்க்கும்போதோ அல்லது அது பற்றி பேச்சு எழும் போதோ பல பெரியவர்கள் 'உன்ன மாதிரிதா அந்த காலத்துல நானு...' என்று அவர்களுடைய அனுபவத்தை கூற ஆரம்பிக்கிறார்கள். அவர்களுடைய மனது தமது இளமை கால நினைவுகளை தொடர்ந்து அசை போட்டபடியே இருக்கிறது.

எண்பது வயது நிச்சயம் ஓய்வு எடுக்க வேண்டிய வயது. ஆனால் சிலருக்கு அது கிடைப்பதில்லை. பெற்ற குழந்தைகளால் புறக்கணிக்கப் படும் பொழுது தங்களுடைய மிச்ச வாழ்நாளை கழிக்க எதாவது ஒரு வேலை செய்ய வேண்டி இருக்கிறது.

மிக சிலரே எண்பது வயது தாண்டியும் விருப்பப் பட்டு வேலை செய்கின்றனர். எங்கள் வீட்டிற்குப் பக்கத்துக்கு வீட்டில் ஒரு முதியவர் வயது தொண்ணூறை தொடும். ஆரோக்கியமான தேகம் இல்லாவிட்டாலும் இன்னும் நடமாடிக் கொண்டுதான் இருக்கிறார். இந்த வயதிலும் காலையில் ஐந்து மணிக்கு எழுந்து விடுவார். அவரால் எப்பொழுதும் சும்மா உட்கார்ந்திருக்கவே முடியாது. எதாவது சிறு சிறு வேலைகள் செய்து கொண்டே இருப்பார். வீட்டில் இருப்பவர்கள் 'ஏன் இப்படி சிரமப்படுகிறீர்கள்..' என்று கூறினாலும், அவருக்கு வேலை செய்வது சிரமம் இல்லை, சும்மா உட்காந்திருப்பதுதான் சிரமம்.

அதே போல் வயது முதிர்ந்த பாட்டி ஒருவர். தினமும் ஆடு மேய்ப்பதை பார்க்க முடியும். விடாமல் மழை பெய்யும் நாட்கள் தவிர அவர் ஆடு மேய்க்காமல் இருந்த நாள் கிடையாது. ஆனால் இப்பொழுது சுத்தமாக நடமாட முடியாமல் படுத்த படுக்கையாகி விட்டார். தன்னால் வேலை செய்ய முடியாமல் போனது அவர் மனதை மிகவும் பாதித்திருக்க வேண்டும். வீட்டில் இருப்பவர்களை எல்லாம் காரணமின்றி திட்ட ஆரம்பித்தார். இன்றும் உறங்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் யாரையாவது திட்டிக் கொண்டே தான் இருப்பார். அதற்க்கு காரணம் நிச்சயம் தன்னால் முன்பு போல் எழுந்து நடக்க முடியவில்லை, வேலை செய்ய முடியவில்லை என்பதே.

தனது இயலாமையை மற்றவர்களை திட்டுவதன் மூலம் வெளிப்படுத்துகிறார். இவ்வளவு காலமும் இந்த குடும்பத்திற்கு உதவியாய் இருந்துவிட்டு இன்று பயனற்று படுத்திருப்பதை அவர் மனம் ஏற்றுக் கொள்ளவில்லை.

எந்நேரமும் ஓய்வாக இருப்பவருக்கு ஒவ்வொரு நாளும் மற்றும் ஒரு நாளே. குறிப்பிட்ட நேரத்திற்கு உண்பது உறங்குவது என்று ஒரு சின்ன சுழற்சிக்குள் தங்களை அடைத்துக் கொள்கிறார்கள். பண்டிகை பற்றியோ விசேஷ தினங்கள் பற்றியோ பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. உணவு உடை என்று எதிலும் நாட்டம் இல்லாமலே இருக்கின்றனர். அவர்களுக்கான தேவைகளும் மிகவும் குறைந்துவிடுகிறது.

நண்பர்களிடம் தனிமை பற்றி எவ்வளவோ சிலாகித்துக் கூறியிருக்கிறேன். ஆனால் அதே தனிமைதான் முதியவர்களை வாட்டி வதைக்கிறது. அவர்களிடம் சற்று நேரமேனும் பொறுமையாக அமர்ந்து உரையாட குடும்பத்தில் யாருக்கும் நேரம் இருப்பதில்லை. நேரம் இருந்தாலும் அவசியம் இருப்பதில்லை. பொத்திப் பொத்தி வளர்த்த தம் மக்களே தன்னை புறக்கணிப்பதை நினைத்து மன வாட்டம் கொள்கின்றனர்.

இன்றைய வாழ்க்கை முறை அவர்களை வெகுவாக பாதிக்கிறது. அவர்களால் இந்த அவசர வாழ்க்கை முறையை ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. அதேபோல் தங்களுடைய வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்கள் நிராகரிக்கப் படுவதையும் தாங்கிக் கொள்ள முடிவதில்லை.

சரியாக ஞாபகம் இல்லை, அப்பொழுது எனக்கு பன்னிரெண்டு வயதிருக்கும். தோட்டத்தில் இருக்கும் கிணறுக்குச் சென்று நண்பர்களுடன் நீச்சல் அடிப்பது வழக்கம். ஒரு முறை பக்கத்து தோட்டத்தில் இருந்த தாத்தாவும் குளிப்பதற்காக வந்தார். தள்ளாடும் நடை, இருந்தாலும் எப்போதாவது கிணற்றுக்கு வருவதுண்டு. நீச்சல் தெரிந்தாலும் படிக்கட்டிலேயே அமர்ந்து குளிப்பார். நாங்கள் அங்கும் இங்கும் குதித்து விளையாடிய பொழுது அவர் முகத்தில் தண்ணீர் அடித்தது. 'கொஞ்சம் தள்ளிப் போய் விளையாடுங்கப்பா..' என்று கூறினார். அன்றைய குறும்புப் பருவத்தில் அவருடைய சிரமம் எங்களுக்கு தெரியவில்லை. வேண்டும் என்றே மேலும் மேலும் கை கால்களை அடித்து தண்ணீரை சிதறடிக்கச் செய்தோம். தாத்தாவால் படியில் நிற்கவே முடியவில்லை. அவர் மீண்டும் வேண்டாம் என்று சொல்லியும் நாங்கள் கேட்பதாக இல்லை.

மெதுவாக கிணற்றிலிருந்து மேலே ஏறி நின்றவர் 'இப்படிப் பன்னறீங்கலேப்பா..' என்றார் மெல்ல. அப்படிக் கூறும் பொழுதே அவர் குரல் கம்மியது. உதடுகள் துடித்தது. அதுவரை விளையாட்டாக செய்துகொண்டிருந்த நாங்கள் சட்டென்று அமைதியாகிவிட்டோம். என்ன சொல்ல வேண்டும் என்ன செய்ய வேண்டும் என்று எங்களுக்கு தெரியவில்லை. தாத்தாவும் அங்கிருந்து சென்றுவிட்டார்.

அவருடைய உதடு துடித்து குரல் கம்ம என்ன காரணம். பிறகு அதுபற்றி நினைக்கும் போதெல்லாம் என் மனது கணக்கும். அந்த வயதான முதியவரின் உள்ளம் என்னவெல்லாம் நினைத்திருக்கும். தன் இளமை காலத்தில் இதுபோல் எப்படியெல்லாம் நீச்சல் அடித்திருப்பார், இன்று தன் இயலாமையை நினைத்து வருந்தினாரா? தான் சொல்வதை இந்த சிறுவர்கள் கூட கேட்க மாட்டேன் என்கிறார்களே என்ற ஆதங்கமா? அது மனதளவில் என்னை பாதித்த நிகழ்ச்சி. வயது முதிர்ந்தவர்களிடம் அவர்கள் மனது நோகாமல் நடந்துகொள்ளவேண்டும் என்று எனக்கு உணர்த்திய நிகழ்ச்சி.

சொந்த தாத்தா பாட்டியையே மதிக்காத இந்தக் காலத்தில் வயதிற்கு மரியாதை கொடுப்போர் மிகச் சொற்பமே. அந்தக் காலத்தில் தாங்கள் பெற்ற அனுபவம் இன்றைய இளைய தலைமுறைக்கு வாய்மொழியாக கூற நினைத்தாலும் கேட்பதற்கு ஆள் இல்லை என்று அமைதியாகி விடுகின்றனர்.

எல்லா வீடுகளிலும் முதியவர்கள் இருந்தால் அவர்களுக்கென இடம், படுக்கை ஒதுக்கப் படுகிறது. அவற்றோடு சேர்த்து அவர்களும் ஒதுக்கப் படுகிறார்கள். அவர்களும் தங்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட இடத்தை தாண்டி அதிகம் வெளியே வருவதில்லை. ஒரு ஆமை தன் ஓட்டிற்குள் பதுங்கிக் கொள்வதைப் போல அவர்களும் தங்களுக்கான இடத்திலேயே முடங்கிக் கொள்கிறார்கள்.

ஒரு உண்மையை எல்லோரும் மறந்து விடுகிறோம். எல்லோருக்கும் ஆயிரம் முறை முழு பிறை காண கிட்டுவதில்லை.


-

Friday, June 11, 2010

விடியாத இரவொன்று

அனுபவித்த இன்பத்தை
மீண்டும் மீண்டும் தேடும்
ருசி கண்ட பூனையாய்
மனது

நம்பிக்கை மேல் இழுக்க
துன்பங்கள் கீழ் இழுக்க
பள்ளத்தின் அந்தரத்தில்
வாழ்க்கை

வாழ்க்கையின் அர்த்தம் தேடி
புரியாத புதிர்தான்
வாழ்க்கை என்று புரிந்து கொண்ட
ஞானம்

முன்னே புகழ்வதும்
பின்னே  இகழ்வதுமாய்
மனிதம் மறந்துவிட்ட
சுற்றம்

வெறி கொண்ட மக்களிடம்
பிறர் நலன் என்பது
கேலிப் பொருளான
பரிதாபம்

பொருளீட்டும் கட்டாயத்தில்
தன்மானத்தோடு சேர்த்தே
இழந்துவிட்ட
நிம்மதி

சற்றேனும் நிம்மதி
என்றுணரும் இரவு
 வேண்டும் எனக்கு
"விடியாத இரவொன்று".

-

Tuesday, June 8, 2010

இரவுப் பறவையின் எச்சம்

தூக்கம் வராமல் புரளும் முன் இரவுகள் தூங்கிக் கொண்டிருக்கும் பல நினைவுகளை தட்டி எழுப்பிவிட்டுச் செல்கின்றன. போர்வைக்குள் கதகதப்பாக படுத்துக் கொண்டு கண்களை மூட, நம்மைப் பார்த்ததும் எழுந்து ஓடி வரும் நாய் குட்டியைப் போல ஆழ்மனத்தின் எண்ணங்கள் ஓடி வருகிறது.

உறக்கம் வராத நேரங்களில் மொட்டை மாடியில் உலவிக் கொண்டிருப்பதுண்டு. சில வேளைகளில் வானத்தைப் பார்த்தபடி படுத்துவிடுவதும் உண்டு. புறநகர்ப் பகுதியில் சற்று உள்ளடங்கிய வீடாதலால் அந்த நேரத்திற்கு வாகனப் போக்குவரத்தோ, இரைச்சலோ இருக்காது.

அந்த இரவும் அமைதியும் மனதை மயிலிறகாய் வருட ஆரம்பித்தது. இதமான வருடலில் பல எண்ணங்கள் துயில் கலைந்தன.

உயரமான இடத்தில் நின்று கொண்டு சமதளப் பரப்பை பார்ப்பது எப்பொழுதுமே பரவசம் அளிக்கக் கூடியது. என் கல்லூரி நாட்களில் அருகில் இருக்கும் சிவன்மலைக்கு தனியே செல்வதுண்டு. 'காங்கயம்' பேருந்து நிலையத்தில் இருந்து ஐந்து கிலோ மீட்டர் இருக்கும்.

அங்கு மலை ஏறுவதற்கு படிகள் இருக்கும். வாகனங்கள் செல்ல தார் சாலையும் இருக்கும். அது மட்டுமன்றி, தார் சாலைகள் அமைப்பதற்கு முன், கோவிலுக்கு யானை செல்ல தனியே ஒரு பாதை இருக்கும். 'யானைப் படி' என்று பெயர். யானையால் படிக்கட்டில் இறங்க முடியாது என்பதால் இந்தச் சாலை. இது கற்களை சாய்வாக பரப்பி படிகள் இல்லாமல் யானை நடந்து வருவதற்கு ஏதுவாக பாதையை அமைத்திருப்பர். நான் மலைக்குப் போகும் சமயங்களில் அந்தச் சாலை அதிகம் பயன்பாடின்றி இருந்தது. கோவில் விசேஷம் எதுவும் இல்லாத தினத்தில் தான் நான் செல்வேன். அதனால் அந்த சமயங்களில் 'யானைப் படி' ஆள் அரவமின்றி இருக்கும். நான் அந்தப் பாதையில் தான் செல்வேன்.

அது ஒரு அற்புதமான அனுபவம். முக்கால்வாசி தூரம் சென்றவுடன் அமர்வதற்கு தோதாக ஒரு பாறை இருக்கும். அங்கு அமர்ந்து கொண்டு பார்த்தால் வெகு தொலைவு சமவெளி தெரியும். அங்கிருந்து பார்க்கும் பொழுது உலகம் தனது இயக்கத்தை நிறுத்திக் கொண்டதைப் போல தோற்றம் அளிக்கும். அடிவாரத்தில் வாகனங்கள் ஊர்வது தெரியும். இன்னும் சற்று தொலைவில் வீடுகள் புள்ளிகளாய் தெரியும். அதையும் தாண்டி காட்சிகள் அசையாத ஓவியங்களாய் தெரியும். அதற்க்கு மேல் புகை மண்டிய தோற்றம் தவிர ஒன்றும் தெரியாது.

சாதாரண இடங்களில் ஒரு குறிப்பிட்ட தொலைவு மட்டுமே காணப் பழகிய கண்களுக்கு, இவ்வளவு தொலைவான காட்சி, முதன் முதல் இரயில் பார்க்கும் சிறுவனின் பிரமிப்பை கொடுக்கிறது. சிறிது நேரம் பார்வை நிலைகொள்ளாமல் அலைகிறது. மொத்தக் காட்சியையும் உள்வாங்கிக் கொள்ள துடிக்கிறது. சற்று நேரத்தில் எங்காவது ஒரு இடத்தில் நிலை குத்தி விடுகிறது.

தொடர்ச்சியான மலை பிரதேசங்கள் இப்படியான ஈர்ப்பை கொடுப்பதில்லை. சுற்றிலும் உயர்ந்தும் தாழ்ந்தும் இருக்கும் மலைகள் பார்வை தூரத்தை குறைக்கின்றது. ஆனால் சமதளப் பரப்பில் இருக்கும் ஒரு சிறிய மலையில் நிற்கும் பொழுது, மலையடிவாரத்தில் இயங்கும் உலகம் ஊமைப் படமாய் காட்சி அளிக்கிறது.

வெயில் காயும் பகல், அவ்வப்பொழுது எங்காவது கேட்கும் குருவி கத்தும் ஓசை, ஆட்கள் அற்ற சுற்றம், சில நூறு அடிகள் கீழே சற்று வறட்சியான பூமி. நண்பனுடன் அந்த மலையில் அமர்ந்திருந்தேன். இதே இடத்தில் பல முறை தனியே அம்ர்ந்திருந்திருக்கிறேன். நேரம் போவது தெரியாமல் வேடிக்கை பர்ர்த்திருக்கிறேன். ஆனால், நண்பனுடன் சென்றிருந்த அன்றோ அதிக நேரம் இருக்க முடியவில்லை. அப்படிப்பட்ட ஒரு இடத்தில் அவனால் அரைமணி நேரத்திற்கு மேலாக உட்கார முடியவில்லை. அவனுடைய நச்சரிப்பால் திரும்பிவிட்டோம்.

பின்பு யோசித்துப் பார்க்கையில், ஏன் அவனால் அங்கு இருக்க முடியவில்லை? தனிமை அவ்வளவு கொடியதா? அந்த அமைதி அவனை பயம் கொள்ளச் செய்ததா? இரைச்சல் தவிர்த்து கொஞ்சம் நேரம் கூட இருக்க முடியாததன் காரணம் என்ன? கேள்விகள் மழைக் குமிழ்களாக தோன்றி மறைந்து கொண்டிருந்தன.

அந்த தனிமையும் அமைதியும் என்னை ஏன் கவர்ந்தது? அன்றாட வாழ்க்கையின் சத்தங்கள் அலுத்துவிட்டதா? எனில், அமைதியே மனதிற்கு நிம்மதியா? பின்பு எதற்காக இத்தனை ஆர்பாட்டங்கள்?

மலையில் தனியே அமர்ந்திருக்கும் பொழுது, அந்த அமைதியும், காட்சியும் எப்பொழுதும் என்னிடம் ஏதோ சொல்ல முனைவதைப் போலவே இருக்கும். எதையோ உணர்த்த துடிப்பதாகவே உணர்வேன். ஆனால், அது என்னவென்று தெளிவடைய முடிந்ததில்லை.

வீசும் காற்றுக்கு தன்னை ஒப்புக் கொடுத்துவிட்டு அதனூடே அலையும் சருகைப் போல் மலையின் அமைதிக்கு என்னை ஒப்புக் கொடுத்துவிட்டு அந்த அமைதியினூடே பயணப் பட்டிருந்த நேரங்கள் கிடைத்தர்க்கரியவை.

ஒரு திருவிழா நாள். மலைக்குச் சென்றிருந்தேன். வழக்கம் போல் யானைப் பாதையில் ஏறி சற்று தூரம் சென்று அமர்ந்து கொண்டேன். மலை அடிவாரத்தில் எங்கு நோக்கிலும் கூட்டம். சிலர் மலையை வளம் வருவதும் உண்டு. தார் சாலையில் வாகனங்கள் வருவதும் போவதுமாக இருந்தன. படிகளிலும் மக்கள் ஏறி இறங்கிக்கொண்டு இருந்தனர்.

ஆனால் அந்த விசேஷ தினத்தில் கூட அத்தனை கூட்டம் இருந்தும் நான்கைந்து பேரைத் தவிர அந்தப் பாதையில் யாரும் வரவில்லை.

தார் சாலை அமைக்கும் முன்னர் விசேஷ தினங்களில் படியில் ஏற சிரமப்படுபவர்கள் இந்த வழியைத்தான் தேர்ந்தெடுத்திருப்பர். விசேஷ நாட்களில் இந்தப் பாதை திருவிழாக் கோலம் பூண்டிருந்திருக்கும். ஆனால் இன்று யாரும் கண்டுகொள்ளப் படாமல் புறக்கணிக்கப் பட்டிருக்கிறது. மக்கள் தனிமையான இடங்களை வெகு சுலபமாக தவிர்த்து விடுகிறார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.

மக்கள் ஏன் சந்தடிகளையும் ஆரவாரத்தையும் விரும்புவதுபோல் தனிமையையும் அமைதியையும் விரும்புவதில்லை என்று வியப்பாகவே இருக்கிறது.

மலைகளைப் பார்க்கும் பொழுது அவைகள் ஆழ்ந்த தியானத்தில் இருப்பது போலவே தோன்றும். அதில் வாழும் உயிர்களின் இயக்கம் அவ்வளவாக வெளியில் தெரிவதில்லை. மலைகளில் அதன் கரடு முரடான நிலத்தில் சுற்றி அலைவது எனக்குள் இருக்கும் ஏதோ ஒரு புரிந்துகொள்ளப்பட முடியாத உணர்வின் வடிகாலாய் இருக்கிறது.

ஏன் இப்படி யாருமே தனிமையை விரும்பாமல் இதுபோன்ற நல்ல இடங்களை தவிர்கிறார்கள் என்ற எனது ஏக்கத்தை சிலர் வேறு மாதிரி தீர்துவைத்தார்கள். ஆம், இப்பொழுதெல்லாம் அந்த 'யானைப் படி' யில் யாரையும் அனுமதிப்பதில்லை. சிலர் அங்கு கும்பலாக வந்து மது அருந்துவதாகவும், பிரச்சனைகளில் ஈடுபடுவதாகவும் தெரிவித்தனர். மிகவும் வருத்தமாக இருந்தது.

அங்கு மலையோடு ஒன்றி புது புது அனுபவங்களை கொடுத்த தனிமை, இன்று இதோ மொட்டை மாடியில் தன்னைப் பற்றிய அனுபவத்தை அதே தனிமை கிளர்ந்தெழச் செய்து கொண்டிருக்கிறது.

நேரம் நழுவிக் கொண்டே இருந்தது. எழுந்துகொள்ள மனம் இல்லை. ஒரு இரவுப் பறவை ஒன்று பறந்தது, எதிர்பாராத விதமாக ஏன் காலின் மேல் எச்சமிட்டுச் சென்றது. எச்சத்தை துடைத்துவிட்டு யோசித்தபொழுது அந்த பறவையின் மேல் கோபம் வரவில்லை மாறாக வேறுமாதிரியான எண்ணங்களை எழுப்பியது. இந்த எச்சத்தைப் போல் நாமும் ஒரு நாள் வாழ்க்கையிலிருந்து துடைத்தெரியப் படுவோம். நாம் வாழ்ந்ததன் அடையாளமாக இந்த பூமியில் எதை விட்டு செல்வது.

சற்று முன் கொண்டிருந்த நினைவும் இந்த எண்ணமும் ஒன்றோடு ஒன்று முடிச்சிட்டுக் கொண்டன.

மலை அழிந்து போகுமா?  மனிதனின் வாழ்க்கையைப் போல் அதுவும் ஒருநாள் இல்லாமல் போகுமா? அதுபோல் அழிந்துவிட்ட மலைகள் எதாவது இருக்கிறதா? அப்படி அழிந்திருந்தால் தனது அடையாளமாக எதை விட்டுச் சென்றது? அதன் அடையாளம் அழியாததா? அல்லது அதுவும் அழியக்கூடியதா? வாழ்ந்து முடிந்த பின் எதற்காக நமக்கான அடையாளம் தேவைப் படுகிறது?

மயிலிறகின் வருடலில் விழிப்புற்ற எண்ணங்கள் இப்பொழுது கேள்விப் புயலால் அலைகழிக்கப் பட்டது. தாகத்தோடு அருந்திக் கொண்டிருக்கும் தண்ணீரை பாதியில் பிடுங்குவதைப் போல மழை தூர ஆரம்பித்து எண்ணங்களை இடைமறித்தது.

பின்னோக்கிய நினைவுகளையும் எழுந்த கேள்விகளையும் அங்கேயே விட்டுவிட்டு படுக்கைக்குத் திரும்பினேன். அவை இன்னும் அங்கேதான் சுற்றிக் கொண்டிருக்கும் என்னை மீண்டும் எதிர்பார்த்து.

-

Thursday, June 3, 2010

நகர வாழ்க்கை

நகர வாழ்க்கை
கடிகார வட்டத்தினுள்
சுற்றிவரும் முள்ளாய்
நான்.

பொய்முகம்
மூடிய முகத்தினுள்
முரண்பட்டு நின்றது
அகம்.

நூதன திருட்டு
எந்த பயமும் இல்லாமல்
அனுமதியின்றி எடுத்துச் சென்றாள்
என் கண் முன்னே
இதயத்தை.

கனவு
நிகழ் காலம் தாண்டி
அழைத்துச் செல்லும்
கால இயந்திரம்.

கனவு
நிகழாத நிகழ்வை
நிகழ்வதாகக் காட்டும்
மாயக் கண்ணாடி.

தொழில்நுட்பம்
அலைபேசியில்
கண்களால் பேசிக் கொண்டோம்
எஸ்.எம்.எஸ்.

-

Tuesday, May 25, 2010

பழக்கமில்லாத பாதைகள்

அந்த வீட்டிற்கு குடி வந்து இரண்டு வாரங்கள்தான் ஆகியிருந்தது. புதிய வீடு, புதிய இடம், புதிய மனிதர்கள். மெயின் ரோட்டிலிருந்து ஐந்து நிமிட நடையில் வீட்டை அடைந்து விடலாம். அது தாண்டியும் தெரு நீண்டு செல்கிறது. ஆனால், வீட்டை தாண்டி ஒரு நாளும் அந்த தெரு வழியே சென்றதில்லை.

நினைத்துப் பார்த்தால் சற்று ஆச்சரியமாகத்தான் இருந்தது. ஏன் இந்த இரண்டு வார காலங்களில் அதைப் பற்றி யோசிக்கவே இல்லை. வீடு வந்ததும் சட்டென்று சாலையிலிருந்து விலகி வீட்டிற்குள் நுழைந்து விடுகிறேன். தொடர்ந்து சற்று தூரம் நடந்து பார்க்கலாம் என்று எண்ணியதே இல்லை.

இங்கு மட்டும் அல்ல, எந்த ஒரு இடத்திற்கு முதலில் சென்றாலும், சாலையில் இருந்து பிரிய நேரிட்டாலோ அல்லது சென்று சேர வேண்டிய இடத்தை அடைந்து விட்டாலோ அதற்கு மேல் அந்த சாலை எங்கு செல்கிறது என்று யோசிப்பதுண்டு.

பால்ய வயதில் உறவினர்கள் வீட்டிற்கு செல்லும் போதெல்லாம் ஒரு விஷயத்தை உணர்திருக்கிறேன். வீடு சென்று சேரும் வரையில் உள்ள பாதை உறவினரின் வீட்டிற்கானது. வீட்டை அடைந்தவுடன் அதற்க்கு மேல் உள்ள சாலை எங்குசெல்கிறது என்ற கேள்வி ஆரம்பமாகிவிடும், தொடர்ந்து சென்று பார்க்க ஆசையாக இருக்கும். ஆனால் விடமாட்டார்கள். ஓரிரு சமயம் ஆர்வ மிகுதியில் பெரியவர்களிடம் அவ்வழியே அழைத்துச் செல்லுமாறு கேட்டிருக்கிறேன். எதற்கு என்று கேட்டால் எதுவும் சொல்லத் தெரியாமல் "சும்மா" என்று கூறியிருக்கிறேன். "சும்மா அங்க போய் என்ன பண்ணப் போறே? போய் விளையாடு போ" என்று கூறி விருப்பத்தை நிராகரித்து விடுவார்கள். தனியே சென்று பார்பதற்கும், ஒரு வேளை திரும்பி வர வழி தெரியாமல் போய்விட்டால் என்ன செய்வது என்று பயமாக இருக்கும். யாரும் பார்க்காத வேளையில் எவ்வளவு தொலைவில் இருந்து வீட்டைப் பார்க்க முடிகிறதோ அவ்வளவு தூரம் மட்டும் சென்று சாலை வளைவுகளில் நின்று பார்த்துவிட்டு திரும்ப ஓடி விந்து விடுவேன்.

ஆனாலும் மனதிற்குள் இடைவிடாமல் கேள்விகள் ஓடிக்கொண்டிருக்கும். இந்த பாதையில் தொடர்ந்து சென்றால் அங்கே யார் இருப்பார்கள்? அடுத்து வரும் ஊரின் பெயர் என்ன? இதே பாதையில் தொடர்ந்து ஒவ்வொரு ஊராக தாண்டிச் சென்று கொண்டே இருந்தால் கடைசியில்எந்த ஊரில் போய் முடியும்?

பாதைகள் முடிவில்லாமல் நீள்கிறது. பல ஊர்களை தனது கரைகளாகக் கொண்டு சிற்றாறு போல் ஓடிக்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு சாலையும் ஊர் பெயர்களைக் கொண்டு அடையாள படுத்தப் படுகிறது. சிட்டாற்றுச் சாலையிலிருந்து கால்வாயைப்போல் தெருக்கள் பிரிகின்றன.

நாம் தினம்தோறும் சென்று வரும் பாதைகள், புதிய பாதைகளைப் போல் சுவாரஸ்யம் கொடுப்பதில்லை. சில சமயங்களில் பழக்கப்பட்ட பாதையின் காரணமாக அந்த சாலையைப் பற்றி நினைவில்லாமல் தன்னிச்சையாகவே நடக்கிறோம். சாலையோர வீடுகளையோ சில வீடுகளின் வித்யாசமான அமைப்புகளையோ கவனிப்பதில்லை. ஆனால் நடந்துகொண்டிருப்பது அறிமுகமில்லாத சாலை மற்றும் இங்கு அடிக்கடி வரமாட்டோம் எனும்போது சுற்றுப் புறங்களை உற்று நோக்கச் சொல்கிறது.

இன்று வீட்டை தாண்டிச் செல்லும் சாலையில் சென்று பார்க்க வேண்டும் என்ற உந்துதலில் நடக்க ஆரம்பித்தேன். வீட்டின் மொட்டை மாடியில் இருந்து பார்த்த சாலை நடந்து செல்லும் பொழுது வேறு மாதிரியாக தெரிந்தது. சிறிது தூரம் நடந்தவுடன் வேறு ஊருக்கு வந்துவிட்டது போல் தோன்றியது. இரு புறங்களிலும் உள்ள வீடுகளை பார்த்தபடியே மெல்ல நடந்து கொண்டிருந்தேன்.

பெரிய பெரிய வீடுகள், சில வீடுகளில் சொந்த உபயோகத்திற்காக நான்கு ஐந்து கார்கள் வைத்திருந்தனர். கார் செட்டின் இடத்தில் தாராளமாக இரண்டு குடும்பங்கள் தங்கலாம். சிலருக்கு வாழ்க்கை இப்படியும் அமைகிறது, சிலருக்கோ பிளாட் பார்மிற்கு கூட தகராறு ஏற்படுகிறது. இந்த இரண்டும் அல்லாத இடைப்பட்ட நிலையில் நான் வாழ்ந்து கொண்டிருப்பதை நினைத்தபடி நடையை தொடர்ந்தேன்.

சற்று தூரத்தில் சிதிலமடைந்த மிகப் பெரிய வீடு. அதன் எதிரே சிறியதாக ஆனால் நன்கு பராமரிக்கப்பட்ட ஒரு அழகான வீடு. வீடு சிரிதா பெரிதா என்பதில் ஒன்றுமே இல்லை, அதில் வசிக்கும் மனிதர்கள் அவர்கள் வீட்டை பராமரிக்கும் விதம் இதைப் பொறுத்தே வீடு உயிரோட்டம் பெறுகிறது.

இலக்கில்லாமல் புதிய பாதையில் நடக்கும் போது ஒரு சிறு பிரச்சனை. பாதை இரு திசையில் பிரிந்து சென்றன. எதை விட்டு எதை தேர்ந்தெடுப்பது, நிச்சயம் இரண்டு பாதையும் வேறுவேறு அனுபவத்தை கொடுக்கும். எந்த அனுபவத்தை தேர்ந்தெடுப்பது. இடது புறமாக சென்ற பாதையை தேர்ந்தெடுத்து நடக்க ஆரம்பித்தேன்.

வாழ்க்கையும் இப்படித்தான், நாம் தேர்ந்தெடுக்கும் துறை, அதில் நம் பணியை அமைத்துக் கொள்ளும் விதம் ஆகியவை நம் வாழ்க்கையின் அனுபவத்தை தீர்மானிக்கின்றன.

வழக்கமான பாதையில் நடக்கும் போது யாரும் நம்மை சந்தேகமாக பார்த்தாலும் நாம் அதைப் பற்றி கவலைப் படுவதில்லை. ஆனால், சம்பந்தம் இல்லாத தெருவில் நடக்கும் போது மற்றவர்கள் சாதாரணமாகப் பார்த்தாலும் நம்மை சந்தேகமாகப் பார்க்கிறார்களோ என்று தோன்றுகிறது. சந்தடி மிக்க தெருக்களில் யாரும் அதுபோல் கவனிப்பதில்லை. ஆனால் குடியிருப்பு மட்டுமே உள்ள தெருக்களில் புதிதாக யாராவது தென்பட்டால் சற்று உற்றுப் பார்க்கவே செய்கிறார்கள். ஒருவேளை நிறுத்தி யார் நீங்கள், யாரைப் பார்க்க வேண்டும் என்று கேட்டால் என்ன சொல்வது. சும்மா சுற்றிப் பார்க்க வந்தேன் என்று கூறுவதா, அப்படி கூறினாலும் சுற்றிப் பார்க்க இது என்ன சுற்றுலா தளமா என்று கேட்டால் என்ன சொல்வது.

நமக்கும் பாதைக்கும் உள்ள தொடர்பின் மூலம் எது? ஒரு பாதையில் செல்ல வீடு, பள்ளி, அலுவலகம், உறவினர்கள் இப்படி ஏதாவது ஒன்று தேவைப்படுகிறதோ? இலக்கில்லாமல் ஒரு புதிய பாதையில் நடக்கும் போது ஏன் மனதில் ஒரு சிறு பதைபதைப்பு ஏற்படுகிறது. பாதை மாறி எங்காவது தொலைந்துவிடுவோம் என்ற பயமா? புதிய விஷயத்தை ஏற்க மனதுக்கு சற்று நேரம் பிடிக்கும் போலும்.

புதிய பாதை மட்டும் அல்ல, புதிய பள்ளி, அலுவலகம், உறவு, முயற்சி என்று அனைத்துமே மனதை சற்று பதைபதைக்க வைக்கிறது.

வனாந்தரத்தின் இடையே நடப்பதை விடவும் ஒரு பாதையில் நடப்பது மனதுக்கு ஆறுதல் அளிக்கிறது. பாதை இருப்பதால் நிச்சயம் இங்கு மனிதர்கள் இருப்பார்கள், எதாவது ஆபத்து என்றாலும் சத்தம் போட்டு உதவியாவது கேட்கலாம் என்று மனது சமாதானம் கொள்கிறது. மனதுக்கு எப்போதும் ஒரு பாதுகாப்பு உணர்வு தேவைப் படுகிறது.

பாதையே இல்லாத ஊர்கள் இருக்குமா? அப்படி இருந்தால் மக்கள் வயல் வரப்புகள் ஊடாக நடந்துதான் செல்ல வேண்டும் என்றால், மனது பாதுகாப்பை பற்றி எண்ணத் துவங்குகிறது. இதுவரை செல்லாத பாதையாக இருந்தாலும், 'பாதை' மனதுக்கு ஒரு வகையில் பாதுகாப்பு உணர்வை தருகிறது.

நடந்தது போதும் என்று தோன்றவே திரும்பிவிட நினைத்தேன். மனதில் சின்ன நெருடல், ஒரு வீட்டின் வாசலில் நின்றபடி ஒருவர் என்னைப் பார்த்துக்கொண்டிருந்தார். இப்பொழுது எப்படி சட்டென்று திரும்புவது, அப்படி திரும்பினால் அவர் என்ன நினைப்பார். இன்னும் சற்று நடந்து அவர் பார்வையில் இருந்து மறைந்தபின் திரும்பலாமா? ஒரு வேளை சற்று தொலைவில் வேறு யாராவது இதே போல் பார்த்துக் கொண்டிருந்தால் என்ன செய்வது. எனக்கு நானே சமாதானம் செய்து கொண்டு திரும்பி நடக்கத் தொடங்கினேன்.

வீட்டை நெருங்கிய போது, இதுவரை சாலையின் அந்தப் பக்கம் இருந்தே வீட்டை பார்த்திருக்கிறேன். இதுதான் முதல் முறை இந்தப் பக்கமாக வீட்டை நெருங்குவது. வீடும் தெருவும் வித்தியாசமான கோணத்தில் தெரிவதாக இருந்தது.

கல்லூரி நாட்களில் நண்பர்களுடன் நிறைய நடந்திருக்கிறேன். நான் படித்த கல்லூரி ஒரு கிராமத்தின் வழியே செல்லும் நெடுஞ்சாலையின் அருகில் இருந்தது. ஹாஸ்டலில் தங்கியிருந்தேன். மாலை வேளைகளில் கிராமத்தை நோக்கி செல்லும் பாதையில் நடப்போம். ஒவ்வொரு நாளும் வேறு வேறு பாதையில் நடப்போம்.

அறிமுகம் இல்லாத பாதையில் கும்பலாக நண்பர்களுடன் நடப்பதற்கும் தனியாக நடப்பதற்கும் வித்யாசம் இருக்கிறது. நண்பர்களுடன் செல்லும் பொழுது உரையாடலின் சுவாரஸ்யத்தில் பல விசயங்களை கவனிக்கத் தவறிவிடுகிறோம்.

பள்ளி நாட்களில் நண்பனின் வீட்டிற்குச் சென்றிருந்தேன். என் வீட்டிலிருந்து ஐந்து கிலோ மீட்டர் இருக்கும். ஆனால் அதுவரை அந்த சாலையில் சென்றதில்லை அதுதான் முதல் முறை. சிறிது நேரம் அவன் வீட்டில் பொழுதை கழித்து விட்டு எங்காவது வெளியில் சென்று வரலாம் என முடிவு செய்தோம்.

அங்கிருந்து சற்று தூரத்தில் ஒரு பனைமரக் காடு இருப்பதாகவும் அங்கு யாருமே வரமாட்டார்கள் என்றும் கூறினான். உனக்கு தைரியம் இருந்தால் என்னுடன் வா உன்னை அங்கு அழைத்துச் செல்கிறேன் என்றான். எனக்கு தைரியம் இருந்தது, இல்லை என்பதை விட, அவன் வீட்டை தாண்டிச் செல்லும் பாதையில் செல்ல வேண்டும் என்பதே எனக்கு ஆர்வத்தை கொடுத்தது.

அதிலும் ஆட்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத மண்பாதை. சைக்கிள் பயணம். மீண்டும் ஒரு புதிய, இதுவரை சென்று பார்க்காத சாலையில் செல்ல வேண்டும் என்பதே என்னை அவனுடன் போகத் தூண்டியது.

ஏனோ நகரங்களில் இருக்கும் பரபரப்பான தெருக்கள் என்னை கவர்வதில்லை. அந்த சந்தடியில் இருந்து வெளியில் வந்தால் போதும் என்றாகிவிடும். அதுமட்டுமில்லாமல் சில வேளைகளில் தெருக்களின் அமைப்பு ஒரே மாதிரியாக குழப்பம் விளைவிப்பதாக இருக்கும். புற நகர்ப் பகுதிகளும் கிராமங்களும் தங்களுடைய நீண்ட சாலைகளில் ஒருவித ஈர்ப்பை கொண்டிருக்கின்றன.

நாம் அடிக்கடி சென்று வந்த பாதையில் பயணிப்பது ஒருவித சந்தோசம் என்றால், இதுவரை சென்றிராத பாதையில் பயணிப்பதும் ஒருவித சந்தோசம். முக்கியமாக, சுற்றுலா செல்லும் போது பார்க்காத பல ஊர்களுக்கு பயணிப்போம். முடிவில்லாத நெடுஞ்சாலைகள். இடையிடையே எதிர்ப்படும் ஊர்கள்.

நெடுஞ்சாலையிலிருந்து பிரிந்து முடிவில்லாமல் ஊர் ஊராக செல்லும் பாதையில் இருசக்கர வாகனத்தில் நாள் முழுதும் பயணித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

வாழ்கையில் பயணங்கள் முடிவதே இல்லை. நாம் பயணம் செய்ய வேண்டிய பார்த்தறியாத எத்தனையோ பாதைகளும் அங்கு ஏற்படக்கூடிய அனுபவங்களும் நமக்காக காத்திருக்கின்றன. பயணிப்போம்.


-

Friday, May 21, 2010

இல்லாத இயல்பு

மனிதனைப் போல் மற்ற உயிரினங்கள் எதுவும் தன் இயல்பை அடிக்கடி மாற்றிக் கொள்வதில்லை.

இயல்பு மாற்றம் எண்ணங்களின் தோற்றம். எண்ணத்தின் வெளிப்பாடு சூழ்நிலையின் வசம். மனிதனின் இயல்பு நிலை மாற்றக் காரணிகளுள் முக்கியமானது சுயநலம்.

இயல்பாய் இருப்பது மிகவும் கடினம் என்பதை நம்மில் பலர் அனுபவரீதியாக அறிந்திருக்கிறோம்.

இயல்பாய் இருப்பது என்றால் உள்ளூர பயத்தை வைத்துக் கொண்டு வெளியில் தைரியமாய் எப்போதும் போல் இருக்கிறேன் என்று காட்டிக் கொள்வதல்ல. தன் பய உணர்ச்சியை மறைக்காமல் வெளிப்படுத்துதலே.

மனதில் ஏற்படும் உணர்சிகளை மறைக்காமல் வெளிப்படுத்துவதே இயல்புத் தன்மை. ஆனால், அது பெரும்பாலும் சாத்தியப் படுவதில்லை. ஒருவரின் மேல் நட்புணர்ச்சி ஏற்படும் போது அதை எளிதாக வெளிப் படுத்தி விடலாம். அதனால் நன்மை அன்றி தீமைக்கான சாத்தியக் கூறுகள் மிக சொற்பம். அதுவே கோபம் அல்லது காமம் எனும் பொழுது உணர்சிகளை மறைத்து இயல்பு நிலையை தவிர்க்க வேண்டியது கட்டாயமாகிறது.

ஒரு மனிதன் இன்னொரு மனிதன் மீது தன் ஆளுமையை திணித்தால், ஆளுமைக்கு உட்படுபவன் இயல்பு எதிர்ப்பதாகவே இருக்கும் என்று அறுதியிட்டுக் கூற முடியாவிட்டாலும் பெரும்பான்மை எதிர்க்கும் மனநிலையாகவே இருக்கும்.

அப்படி எதிர்ப்பதும், பணிந்து போவதும் தன்(சூழ்)நிலையைப் பொறுத்ததே. என்ன மாதிரியான பிரச்சனை வந்தாலும் கவலைப்படாது எதிர்த்து நிற்பது இயல்பு நிலையாகிறது. பிரச்சனைக்கு பயந்து எதிர்ப்பை காட்டாமல் அடங்கிச் செல்வது தன் இயல்பு நிலை மீறலாகிறது.

நம்மில் எத்தனை பேர் சுய ஆதாயத்திர்க்காகவும், பயத்தினாலும் ஒவ்வொரு நாளும் இயல்பை மீறாமல் இருக்கிறோம். ஒவ்வொரு நாளும் ஏதாவதொன்று நம் இயல்பை குலைக்க தயாராக உள்ளது.

தனது சொத்தை பிறர்  அபகரிக்க நினைக்கும் பொழுது இளைத்தவனாய் இருப்பின் எதிர்ப்பதும் வலுதவனாய் இருந்தால் ஒதுங்கிக் கொள்வதும் இயல்பு அல்ல.

சூழ்நிலைக்கேற்றவாறு நடந்து கொல்ல குழந்தைப் பருவத்திலிருந்தே  கற்பிக்கப் படுகிறது. சூழ்நிலைக்கேற்ப நம்மை மாற்றிக் கொள்ளும் பொழுது அங்கே இயல்பு நிலை வெகு தூரம் ஆகிவிடுகிறது. வேண்டுமானால் இப்படிக் கூறலாம், 'சூழ்நிலைக் கேற்றவாறு மாறிக் கொள்வதே நம் இயல்பு'.

சூழ்நிலைக் கேற்றவாறு மாறிக் கொள்வது, நமது சிந்திக்கும் திறனால் எனபது உண்மை. ஆக, சிந்தித்து பகுத்து அறிந்து கொள்வதும் இயல்பாய் இல்லாமல் போவதற்கு காரணியாகும்.

குறிப்பிட்டுள்ள கருத்துக்கள் தவறாகப் புரிந்துகொள்ளவும் வாய்ப்புகள் இருக்கிறது. மனதில் தோன்றும் எண்ணங்களை உள்ளபடியே வெளிப்படுத்துவது இயல்பு. காரணம் கற்பித்து மாற்றிக்கொள்வதோ, சமாதானம் செய்து கொள்வதோ இயல்பில் இருந்து விடுபடுதலே ஆகும்.

இயல்பு மாற்றமும் வாழ்வாதாரமும் ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்புடையது. இயல்பு மாறாமல் இருக்க நினைத்தால் வாழ்வாதாரம் நிச்சயம் பிரச்சனைக்கு உள்ளாகிவிடும்.

நம்மிடம் இன்று இல்லாத, தொலைத்துவிட்ட, பிடுங்கப்பட்ட இயல்பை எப்பொழுதும் தேடியவாறே இருக்கிறோம்.

-

Monday, May 17, 2010

காதல் - நினைவுகள் தாங்கி

உன் 
          தலையுதிர் பூ
          வரவுக்கான காத்திருப்பு
          ஒரு புன்னகைக்கான தவம்
          நினைவுகளால் உறங்காத இரவுகள்
          அலைபேசி அழைப்புக்கான எதிர்பார்ப்பு

மற்ற பெண்களை தவிர்க்கும் பார்வை
நீ தவறவிட்ட கைக்குட்டை
உனக்கு பிடித்த பாடலின் முனுமுனுப்பு

இனி, எதுவும் இல்லை.

உன் திருமண அழைப்பை
எனக்கு அனுப்பாமலாவது இருந்திருக்கலாம்.

-

Friday, May 14, 2010

காணாமல் போன நட்சத்திரம்

அதிகம் மேகங்கள் இல்லாத வானம். ஒளிரும் நட்சத்திரங்கள். மொட்டை மாடியில் படுத்துக்கொண்டு வானத்தை பார்த்துக்கொண்டிருந்தேன். சிறிதும் பெரிதுமாக ஆங்காங்கே வானத்தில் சிதறியிருந்தன நட்சத்திரங்கள்.

பல நாட்களுக்குப் பிறகு இவ்வாறு நட்சத்திரங்களைப் பார்ப்பது மனதை என்னவோ செய்தது. பள்ளி நாட்களில் கிராமத்தில் வாசலில் கயிற்றுக் கட்டிலில் படுத்துக் கொண்டு நட்சத்திரங்களை இரசித்தது ஞாபகம் வருகிறது. அதில் மூன்று நட்சத்திரங்கள் ஒரே நேர் கோட்டில் இருக்கும். அதே போல் வேறு மூன்று நட்சத்திரங்களை கண்டுபிடிப்பதர்க்காக பல இரவுகள் தேடியதுண்டு.

கிராமத்தில் பல நட்சத்திரங்களுக்கு வித்யாசமான பெயர்கள் உண்டு. 'கட்ட குத்துகால் மீன்', 'செட்டிய கெடுத்த ரெட்டி மீன்' இப்படி பல. ஆனால் இந்த இரண்டு மட்டும் தான் இப்போதைக்கு நினைவில் இருக்கிறது.

இன்றைய கால கட்டத்தில் எத்தனை பேர் நட்சத்திரங்களை இரசிக்கிறார்கள். பெரும்பாலும் தொலைகாட்சி தற்கால மனிதர்களின் இரவுப் பொழுதுகளை தனதாக்கிக் கொண்டு விட்டது. இரவானால் தொலைகாட்சி முன் அமர்ந்து விடுகிறோம். வீட்டை விட்டு வெளியே வருவதில்லை. அப்படியே வந்தாலும் வானத்தை இரசிக்க யாருக்கும் நேரம் இருப்பதில்லை அல்லது நேரம் இல்லாதது போல் காட்டிக் கொள்கிறோம்.

நகர் புறங்களில் மல்லாந்து படுத்துக் கொண்டு நட்சத்திரத்தை இரசிக்க பல வீடுகளில் வாசலோ மொட்டை மாடியோ கிடைப்பதில்லை. நாம் வீட்டிற்க்குள் அடைபட்டுக் கொள்ளும் நேரம் தவிர்த்து மற்ற இரவு நேரங்களில் நாம் பார்க்கா விட்டாலும் நட்சத்திரங்கள் நம்மை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது.

கவிஞர்களின் கவிதைகளில் கூட நிலவு இடம்பெற்ற அளவுக்கு நட்சத்திரங்கள் இடம்பெறவில்லை என்றே தோன்றுகிறது. நிலவு ஒன்றுதான் இருக்கிறது. எண்ணிக்கையில் குறைவாக இருப்பதற்கே மதிப்பு அதிகமாக உள்ளது போலும். அதனால்தான் நிலவு இரசிக்கப் பட்ட அளவுக்கு நட்சத்திரங்கள் இரசிக்கப்படவில்லையோ.

இந்த நட்சத்திரம் எத்தனை மனிதர்களை பார்த்திருக்கும். எத்தனை யுகங்களை கடந்திருக்கும். எத்தனை நிகழ்வுகளை சலனமின்றி பார்த்துக் கொண்டிருந்திருக்கும்.

இப்பொழுது நாம் பார்த்துக் கொண்டிருக்கும் சில நட்சத்திரங்கள் உண்மையில் இல்லாமல் இருக்கலாம். பல நூறு ஒளி ஆண்டு தொலைவில் இருந்த நட்சத்திரம், பல நூறு வருடங்களுக்கு முன் உமிழ்ந்த ஒளி இன்று நம்மை வந்தடைகிறது. அதைத்தான் நாம் இன்று காண்கிறோம் என்று சில அறிவியல் ஆய்வுகள் கூறுகின்றன.

ஒருவேளை நாம் பார்க்கும் ஒரு சில நட்சத்திரங்கள் வெறும் ஒளி ஏற்படுத்தும் மாயையாகக் கூட இருக்கலாம். ஆனாலும், பார்க்கப் பார்க்க ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது.

நான் பார்த்த நட்சத்திர வரைபடங்கள் எல்லாம் ஐந்து கோணங்கள் உடையதாகவே இருக்கிறது. ஆனால் நேரில் பார்க்கும் பொழுது அப்படி இருப்பதில்லை. அதன் ஒளிக் கற்றைகள் எல்லா திக்கிலும் சிதறடிக்கப் படுகின்றன.

எத்தனை விதங்கள் சிறிதும் பெரிதுமாய். வெகு சிறு புள்ளியாய், சற்று சிறிதாய், பிரகாசமாய் பழுப்பு நிறம் கலந்ததாய். சில நட்சத்திரங்களின் அமைப்பு கோலம் போடுவதற்கு வைத்த புள்ளிகளாய்த் தெரிகின்றன. சில நேர் வரிசை, சில இடைப் புள்ளி, சில ஊடு புள்ளி.

பார்த்துக்கொண்டிருந்த நட்சத்திரத்தை ஒரு மேகக் கற்றை சிறிது நேரம் மறைத்து விட்டு விலகியது. மேகங்கள் நகர்கையில் நட்சத்திரங்கள் நகர்வதாகவே தோற்றம் அளிக்கும். மேகங்களுக்கு இடையே அவ்வப்பொழுது எட்டிப்பார்த்து கண்ணாம்பூச்சி ஆடும் நட்சத்திரம், அழகோ அழகு.

பல கோடி ஆண்டுகளுக்கு முன்பும் இதே நட்சத்திரங்கள் தான் இருந்தனவா? சில நட்சதிரங்களாவது அழிந்து காணாமல் போயிருக்கும். அந்த நட்சத்திரங்களைப் பற்றி யாருக்கும் தெரியாமலே இருக்கக் கூடும்.

ஒரு நாள் இரவு திடீரென அனைத்து நட்சத்திரங்களும் காணாமல் போய் விட்டால் இந்த வானம் எப்படி இருக்கும்? விடுமுறை நாள் பள்ளிக் கூடமாய் வெறுமையை போர்த்திக் கொண்டுவிடும் அல்லவா?

-

நண்பர்களே, தங்களின் மேலான கருத்தை பின்னூட்டத்தில் பதியுங்கள்.
பிடித்திருந்தால் உங்கள் ஓட்டை பதிவு செய்யுங்கள். 
-

Thursday, May 6, 2010

அதிர்வுகள் - 7 (லவ் மூடு ஸ்டார்ட் ஆயிடுச்சு)

லவ் மூடு ஸ்டார்ட் ஆயிடுச்சு

காதலிக்கும் போது இருக்கும் சந்தோஷத்த விட  அந்த பொண்ண மொத மொதல்ல பாத்து, பேசி, மெல்ல மெல்ல லவ்ஸ் ஸ்டார்ட் ஆகும் பாருங்க அதுதா.. அதுதா சந்தோசமே.

வர்ற போற பொண்ணுகள எல்லாம் சும்மா வேடிக்க பாத்துகிட்டு (அட.. அதாங்க சைட் அடிக்கிறது) இருக்கும் போது அதுல ஏதோ ஒன்னு மனசுக்கு ரொம்பவும் புடுச்சு போகும். அப்புறம் என்ன, கொஞ்ச நாளைக்கு அந்த பொண்ணு எங்க போனாலும் அது கண்ணுல படர மாதிரியே திரிய வேண்டியது. அதுவும் போனா போகுதுன்னு அப்பப்போ நம்மள ஒரு பார்வை பாத்து வைக்கும்.

என்னதா சொல்லுங்க, நம்மள ஒரு ஓரப் பார்வை பாக்கும் போது அப்படியே மண்டகுள்ள சுறுங்கும், நெஞ்சு லப் டப்புன்னு அடிக்கிறதுக்கு பதிலா தம் தும்முன்னு அடிச்சுக்கும், பக்கத்துல இருக்கிற நண்பன் 'டேய் தல வலிக்குதுடா' ன்னு சொன்னாக் கூட சம்பந்தம் இல்லாம கேனத்தனமா சிரிக்கத் தோணும்.

எப்பவாவது பாக்கறது மாறி நம்மள அடிக்கடி பாக்க ஆரம்பிக்கும். அப்பவே மனுஷனுக்கு பாதி கிறுக்கு புடுச்சு போயிரும். எந்த நேரமும் அவ நெனப்பாவே இருக்கும். அடுத்து கொஞ்ச நாள்ல நம்மள பாத்து லேசா சிரிக்க ஆரம்பிக்கும்.

இதுக்கபுரந்தா ஒரு சின்ன தயக்கம், யாரு முதல்ல பேசுறதுன்னு.  ஆனாலும் பாருங்க இந்த பசங்கதா மொதல்ல போயி தத்து பித்துன்னு எதையாவது உளறி பேச்சை ஆரம்பிப்பாங்க.

அதுக்கப்புறம் லவ், ஊர்சுத்தறது, பிரச்சனை, முடிஞ்சா கல்யாணம்(?!)  அப்படின்னு போகும். ஆனா, மொத மொதல்ல ஒரு பொண்ண பாக்கறதுல இருந்து ரெண்டு பேருக்கும் லவ் ஸ்டார்ட் ஆகறது வரைக்கும் இருக்கிற ஒரு த்ரில், கிக்கு இதெல்லாம் காதலிச்சதுக்கப்புரம் இல்லைன்னே தோணுது.

ரொம்ப அனுபவிச்சுதா பாட்டு எழுதிருக்காங்க

திரும்ப திரும்ப பார்த்து பார்த்து
திரும்ப திரும்ப பேசி பேசி
திரும்ப திரும்ப காதல் சொல்லும்
கனவு காதலா

********************************************************
 பார்க்க பார்க்க பிடிக்குமா?

"என்ன மாதிரி பசங்கள பாத்தா பிடிக்காது, பார்க்க பார்க்கத்தான் பிடிக்கும்".

ஆனா எனக்கு எந்த பொண்ண பாத்தாலும் உடனே பிடிக்குது. ஆனா பார்க்க பார்க்க கொஞ்ச நாள்ல பிடிக்காம போயிருது.

ஒரு வேளை அந்த டயலாக்கு பசங்களுக்கு பொருந்தாது போலிருக்கு!

********************************************************

ஒரு சின்ன கவிதை

நான் எழுதிய
கவிதைகள் எல்லாம்
தாங்கள் சரிவர எழுதப் படவில்லை என்று
என் மீது கோபம் கொண்டன
என்னவளைப் பார்த்த பின்பு.

********************************************************
இவளோ தூரம் வந்துடீங்க, ஒரு ஒட்டு போட்டுட்டு போங்க.
********************************************************

-

Wednesday, May 5, 2010

வாழ்க்கை கட்டமைப்பு

வாழ்க்கை எதிர்பார்ப்புகளால், எண்ணங்களால்,  உணர்வுகளால்  கட்டமைக்கப் பட்டுள்ளது.  எதிர்பார்ப்புகள் வாழ்கையை சுவாரஸ்யமாக்குகிறது.  எதிர்பாராத நிகழ்வுகள் வாழ்க்கையோடு சேர்ந்தே பயணிக்கிறது.

வாழ்க்கையும் எதிர்பார்ப்பும் முறையே உடலும் சுவாசமும். எதிர்பார்ப்புகள் இல்லாத வாழ்க்கை சுவாசம் இல்லாத உடல். சவம். சுவாசம் போல் எதிர்பார்ப்பும் ஒரு அனிச்சை செயல். மறுத்தாலும். ஆசை இல்லாமல் இருக்க ஆசை கொண்டதைப் போல்.

ஏமாற்றங்கள், அசுவாரஷ்யங்கள் வாழ்க்கையின் திசையை மாற்றுவதன்றி ஓட்டத்தை நிறுத்துவதில்லை. ஏமாற்றங்கள் அனுபவங்களாகின்றன. அனுபவங்கள் வாழ்கையை வழி நடத்துகின்றன.

சீரான வாழ்க்கை என்று யாருக்கும் நிரந்தரமாய் இருப்பதில்லை நிரந்தரம் அற்ற  வாழ்க்கையில். தெரிந்தும் நிரந்தரம் தேடும் வாழ்க்கை.

வாழ்க்கையின் அர்த்தம் என்பது அவரவர் எண்ணங்களையும் தேடல்களையும் அடிப்படையாகக் கொண்டு அமைகிறது. நிறைவேறிய விருப்பங்களைக் கொண்டு வாழ்க்கை தன்னை அர்த்தப் படுத்திக் கொள்கிறது. 'வரையறுக்கப்பட்ட அர்த்தம்' இல்லா வாழ்க்கை.

ஒரு தேடலில் மற்றொரு தேடல் இடைவெட்டுகிறது. தேடலின் நோக்கம் சிதறடிக்கப் படுகிறது. தேடலின் நோக்கம் வாழ்க்கையின் திசையை தீர்மானிக்கிறது, நோக்கத்தின் எதிர்பார்ப்பு தேடலை துரிதப் படுத்துகிறது. தேடலே வாழ்க்கை.

உணர்வுக் கோர்வை வாழ்க்கையின் இயல்பு. தேவையினால் தேடல், தேடலினால் எதிர்பார்ப்பு, எதிர்பார்ப்பினால் ஏமாற்றம், ஏமாற்றத்தினால் கோபம், கோபத்தினால் இழப்பு, இழப்பினால் தேவை. இப்படி எதாவது ஒன்றினால் மற்றொன்று.

வாழ்க்கையின் ஒப்பனைகள் உணர்வுகளை பூர்த்தி செய்வதில்லை. தரித்துவிட்ட ஒப்பனைகள் அழிக்க முடியா வண்ணம் வாழ்க்கையோடு ஒட்டிக் கொள்கிறது. ஒரு ஒப்பனை களைய மற்றொரு ஒப்பனை தேவைப் படுகிறது. ஒப்பனைக்குள் சிக்கிய உணர்வுகள் நசுக்கப் படுகின்றன.

ஒரு உணர்வை மற்றொரு உணர்வு ஆளுமை செய்யும் பொழுது எண்ணங்கள் அலைகழிக்கப் படுகின்றன. ஆளுமைக்குட்பட்ட உணர்வு எந்நேரமும் கிளர்ந்தெழ தயாராய் இருக்கிறது. ஒரு உணர்வுக்கு மொற்றோன்று வடிகாலாக முடிவதில்லை.

பார்க்கப்படும் விதத்தில் ஒருவரின் வாழ்க்கை மற்றவரால் கற்பனைத் தோற்றம் கொள்கிறது. பார்க்கப்படும் விதமும் உண்மைத் திரிபுக்கு காரணமாகும். தோற்ற மயக்கம்.

மகிழ்ச்சி, அது தன்னை எல்லா இடங்களிலும் மறைத்துக் கொள்கிறது. எண்ணமும், தேவையும் தனக்கு விருப்பமான இடங்களில் அதை தேடி எடுக்கிறது. அதை அடுத்து எண்ணம், மீண்டும் மீண்டும் அதே இடத்தை தேடுகிறது சந்தோசத்தை எதிர்நோக்கி.

பிடிக்காத பிம்பங்களைப் பார்க்காமல் இமைகள் மூடிக்கொள்ளும் வேளைகளில் எண்ணங்கள் திறந்து கொள்கின்றன. எண்ணங்களை மூட மனதுக்கு தெரிவதில்லை.

எதிர்பார்புகளும், எண்ணங்களும் வாழ்க்கையை வழிநடத்திச் செல்கின்றன. செல்லும்.

-

நண்பர்களே, தங்களின் மேலான கருத்தை பின்னூட்டத்தில் பதியுங்கள்.
பிடித்திருந்தால் உங்கள் ஓட்டை பதிவு செய்யுங்கள். 
-

Tuesday, May 4, 2010

என்னதான் நெருங்கிய நண்பனாய் இருந்தாலும்

என்னதான் நெருங்கிய நண்பனாய் இருந்தாலும்

அவசியம் இல்லா அலைபேசி அழைப்பு
எங்களின் சுவாரஸ்ய உரையாடலை
கத்தரிக்கும்

அழகான பெண்
அவனிடம் மட்டும்
சிரித்து பேசுகையில்
நட்புப் காகிதத்தில்
சிறு கசங்கல் ஏற்படும்

நட்பில் ஒளிவு மறைவு
இல்லை என்றாலும்
சில விஷயங்கள்
மறைக்கப் பட்டே தீரும்

விவாதத்தில் தன்
கருத்து தவறாயினும்
முன்னிறுத்தப்படும்

இவைகளெல்லாம்
திட்டமிட்டு நடப்பதில்லை
ஆகவே நாங்கள்
நண்பர்கள் தான்.

-
நண்பர்களே, தங்களின் மேலான கருத்தை பின்னூட்டத்தில் பதியுங்கள்.
பிடித்திருந்தால் உங்கள் ஓட்டை பதிவு செய்யுங்கள். 

-

Tuesday, April 27, 2010

ஒவ்வொரு நாளும் ஏதாவது

ஒவ்வொரு நாளும்
ஏதாவது ஒன்றை சந்திக்க வேண்டி இருக்கிறது

ஏன் என் வாழ்கையில்
இவையெல்லாம் நடந்தேறுகிறது.

கொஞ்சம் மகிழ்ச்சி
கொஞ்சம் சோகம்
கொஞ்சம் பிரச்சனை
கொஞ்சம் தனிமை

சில நேர அமைதி
சட்டென்று பொங்கும் கோபம்

நண்பனின் துரோகம்
சிறு புன்னகை
துளிர்க்கும் கண்ணீர்
வெறுக்கும் சுற்றம்
நீளும் நட்புக் கரம்

முரண் எண்ணங்கள்
ஈர்க்கப்படும் கவனம்
கூடா நட்பு
தெளிந்த மனது

தவிர்க்க முடியா ஆசை
தீராத தேடல்
முடிவில்லா பயணம்
எதிர்கொள்ளும் ஏமாற்றம்

புறம் பேசும் குணம்
விரும்பத்தகாத நிகழ்வு
கேட்கப் படும் உதவி
எதிர்பாரா அதிர்ச்சி

ஏன் என் வாழ்கையில்
இவையெல்லாம் நடந்தேறுகிறது

ஆனாலும்,
இது எதுவும் இல்லாவிட்டால்
அது வாழ்க்கையாகவும் இருக்காது..

-
நண்பர்களே, தங்களின் மேலான கருத்தை பின்னூட்டத்தில் பதியுங்கள்.
பிடித்திருந்தால் உங்கள் ஓட்டை பதிவு செய்யுங்கள். 

 -
 

Thursday, April 22, 2010

அதிர்வுகள் - 6 (ஒரு கமல் இரசிகரின் கேள்வி)

உங்களுக்கு வினு சக்கரவர்த்தி  யாருன்னு தெரியுமா?

"ஏம்பா, தமிழ் சினிமா பாக்கிற எங்களுக்கு வினு சக்கரவர்த்தி யார்னு தெரியாதா என்ன?" என்று நீங்கள் அங்கே கேட்கும் கேள்வி இங்கே வரை கேட்கிறது.

நீங்க கேட்டு என்னங்க பிரயோஜனம். இத படிங்க.

நேத்து  KTV ல  'நாட்டாமை' படம் பார்த்து கொண்டிருந்தேன் நம் நண்பர்களுடன். நமக்குதா வாய் சும்மா இருக்காதே, இந்த சீன்ல மீனா வருவாங்க , அடுத்த சீன்ல வினு சக்ரவர்த்தி வருவாரு பாருங்கன்னு ஆன்லைன் கமெண்ட்ரி கொடுத்து கொண்டிருந்தேன்.

அப்போ நம்ம நண்பர் ஒருத்தர் கேட்டார், "அது யாருங்க வினு சக்கரவர்த்தி?".

இதுல வேடிக்கை என்னன்னா, நம்ம நண்பர் ரொம்ப காலமா கமலோட இரசிகர். எனக்கு அப்பதா திடீர்னு ஒரு டவுட்டு வந்துது. கமல் தமிழ் படத்துலதா நடிக்கிராரான்னு.

பின்ன என்னங்க, அந்த காலத்துல இருந்து கமல் இரசிகரா இருக்கிற ஒருத்தருக்கு வினு சக்கரவர்த்தி யாருன்னு தெரியாதுன்னா என்னான்னு நெனைக்கிறது.

இத பத்தி நீங்க கண்டபடி நெனைச்சா அதுக்கு நான் பொறுப்பில்லை.

*****************************************************

இரவினை கவிதையாய் மொழி பெயர்பேன்

இது "மேகங்கள் என்னை தொட்டு போனதுண்டு" என்ற பாடலில் வரும் வரி. இந்த பாட்ட கேட்டுட்டு சரி நாமும் நம்ம இரவ கவிதையா மொழி பெயர்தா என்னான்னு தோனுச்சு.

அதனால ஒரு இரவுல உக்காந்து என்னத்த மொழி பெயர்கிரதுன்னு யோசிச்சப்ப....

காலையில பஸ்ல ஏறும்போது அந்த கண்டக்டர் ஐம்பது பைசா மீதி சில்லறை கொடுக்காம ஏமாத்திட்டானே, ம்ம்ம்...

நம்ம என்னதா மாஞ்சு மாஞ்சு பாத்தாலும் நம்மள ஒரு பிகரும் பாக்க மாடேங்குதே, இதுக்கு என்னதா பண்ணுறது!

ஒரு வேலையும் இல்லாட்டியும், ஏதோ கம்பனியோட மொத்த வருமானமும் என்னாலதா அப்படிங்கற மாதிரி பீலா உடுற ஆளுங்கள என்ன பண்ணலாம்?

அட ராத்திரியாவது ருசியா சாப்பிடலாமுன்னு வந்தா, ஒரு ஹோட்டலும் ஒழுங்கா இல்லையே...

ஏங்க, நீங்களே சொல்லுங்க. இதை எல்லாம் கவிதையா மொழி பெயர்தா நல்லாவா இருக்கும். என்னங்க பண்றது ராத்திரில உக்காந்து யோசிச்சா இப்படித்தான் தோணுமோ!

*****************************************************

ஒரு சின்ன கவிதை

எனக்குப் பிடிக்காதவர்களை
நான் திட்டுவதில்லை
சில சமயம்
என்னையே எனக்கு
பிடிப்பதில்லை.

*****************************************************

ஒரு சின்ன ஆசை

என்றாவது ஒரு நாள், ஊர் பேர் தெரியாத, ஆட்கள் இல்லா இடத்தில் நான் தொலைந்து போக வேண்டும்.

*****************************************************

நண்பர்களே, தங்களின் மேலான கருத்தை பின்னூட்டத்தில் பதியுங்கள்.
பிடித்திருந்தால் உங்கள் ஓட்டை பதிவு செய்யுங்கள். 

-

Tuesday, April 20, 2010

பனைமரம் - கடந்த காலம்

வயல் காட்டு வழியே நடந்து கொண்டிருந்தேன். சற்று தூரத்தில் ஒரு பனைமரம் தனியே நின்றிருந்தது. ஒரு காலத்தில் அந்த வழி நெடுக பனை மரங்கள் இருந்தன. காலச் சுழற்சியில் மற்ற அனைத்து மரங்களையும் இழந்து ஒற்றை மரத்துடன் நீண்டிருந்தது பாதை.

வயல் காடுகளில் இருக்கும் பனைமரங்கள் பெரும்பாலும் வரப்பு ஓரங்களில் தான் இருக்கிறது. இல்லை, வரப்புகள் பனைமரங்களை ஒட்டியே இருக்கிறது.

அந்த பாதை வழியேதான் நகர்புறச் சாலையை அடைய முடியும். சிறு வயதிலிருந்து பல வருடங்கள் அந்த பாதை வழியே தினமும் பல முறை கடந்திருக்கிறேன். ஒவ்வொரு முறை கடக்கும் பொழுதும் அந்த பனை மரங்களைப் பார்க்காமல், அதைப் பற்றி நினைக்காமல் சென்றதில்லை.

அப்படியே ஒரு வேளை வேறு ஏதாவது நினைப்பில் சென்று கொண்டிருந்தாலும் அந்த மரங்களின் சலசலப்பு என் நினைவை கலைத்து  தன் இருப்பை சொல்லிவிடும்.

சிறு காற்றுக்கும் ஒலி எழுப்பக் கூடியது பனை ஓலைகள்.பனை ஓலைகளின் சலசலப்பு இரவு வேளைகளில் பயத்தை ஏற்படுத்துவதாக இருக்கும்.

என் வீட்டிற்கு செல்லும் பாதையின் அடையாளமாய் இருந்த மரங்கள் இன்று இல்லை. மரங்கள் அங்கு இருந்ததற்கான அடையாளங்கள் கூட இன்று அழிந்து விட்டது. ஆனாலும் அதன் ஞாபகங்களை சுமந்தபடியே இருக்கிறது பாதை.

பனைமரம் என்று கூறினாலே சட்டென்று வறண்ட பூமி ஞாபகம் வருகிறது. எப்படிப் பட்ட வறட்சியையும் தாங்கிக் கொள்ளக் கூடியது பனைமரம். தண்ணீரில்லாமல் பனைமரம் வறண்டு போகிறது என்றால் அந்த ஊறில் நிச்சயம் மனிதர்கள் வாழ முடியாது.

என் பாதையில் இருந்த மரங்களை வறட்சியான காலத்திலும் பார்த்திருக்கிறேன், மழைக்காலங்களிலும் பார்த்திருக்கிறேன். அவை மழைக் காலத்தில் துளிர்விட்டு வறட்சிக் காலத்தில் காய்ந்து விடுவதில்லை. எப்பொழுதும் ஒரே மாதிரியாகவே இருக்கிறது. அவ்வளவு எளிதாக பனை மரங்கள் காய்ந்து விடுவதில்லை.

மற்ற மரங்களைப் போல் கிராமங்களில் பனை மரங்களை யாரும் நட்டு வளர்ப்பதில்லை. தானாகவே வளர்கிறது. என்னுடைய ஆச்சரியம் எல்லாம், பாதை நெடுக எப்படி அந்த பனை மரங்கள் வரிசையாக  முளைத்தன என்பதுதான்.

 சில நேரங்களில் அதன் அருகே சென்று தொட்டு தடவிப் பார்ப்பேன். செதில் செதிலாய் கையை கிளித்துவிடுவது போல் இருக்கும். அந்த பனைமரங்கள் எனக்கு தின்னக் கொடுத்ததுதான் எத்தனை. நுங்கு, பனம்பழம், பனங்கிழங்கு,  பனம் கோட்டையில் இருக்கும் பூ. அது மட்டுமில்லாமல் பதநீர் மற்றும் விளையாட நுங்கு வண்டி.


வேம்பு, அரச மரங்களைப் போல பனைமரம் நிழலுக்கு அவ்வளவாக உதவாது. ஆனாலும் அதன் மற்ற பயன்பாடுகள் மிக அதிகம். மரத்தின் நுனி முதல் அடிவரை பல விஷயங்களில் பயன்படுகிறது.


பனை ஓலைகள் கூட கத்தி போல கூர்மையாக இருக்கும். சற்று கவனமில்லாமல் கையில் பிடித்தால் அறுத்து விடும்.

பனைமரம் இல்லாத கிராமங்கள் மிக அரிதாகவே இருக்கும். பனைமரம் காலத்தின் சின்னம். வறண்ட பூமியின் அடையாளம். மென்மையின் எதிர்ப்பதம். சலசலப்பின் அங்கீகாரம். தனிமையின் இருப்பிடம்.

கூட்டமாக,  குடும்பம் போல் இருந்த மரங்களில் இன்று இந்த ஒற்றைப் பனைமரம் மட்டும் மிச்சம் இருக்கிறது தனது மிச்ச நாட்களை எதிர் நோக்கி.

-

நண்பர்களே, தங்களின் மேலான கருத்தை பின்னூட்டத்தில் பதியுங்கள்.
பிடித்திருந்தால் உங்கள் ஓட்டை பதிவு செய்யுங்கள்.
-

Monday, April 19, 2010

தலைப்பைப் பார்த்து படிக்கப் படும் பதிவுகள்.

தலைப்பைப் பார்த்து படிக்கப் படும் பதிவுகள்.

எல்லோரும் பதிவு எழுதுகிறார்கள்
கவிதை அனுபவம் நகைச்சுவை என்று

ஆனால்  எழுதப்படும்
கரு சுற்றி வருகிறது

சுய கற்பனை
சுய எள்ளல்
சுய பெருமை
சுய பச்சாதாபம்

சந்தித்த இகழ்ச்சி
சந்தித்த மகிழ்ச்சி
சந்தித்த வறுமை
சந்தித்த நண்பர்

எதிர்கொண்ட நிகழ்வு
எதிர்கொண்ட பிரச்சனை
எதிர்கொண்ட காதல்
 எதிர்கொண்ட சமூகம்

சிந்தித்த கற்பனை
சிந்தித்த கவிதை
சிந்தித்த கதை

அனுபவித்த சோகம்
அனுபவித்த வரிகள்
அனுபவித்த பாடல்
அனுபவித்த புணர்ச்சி

எதிர்க்கும் ஜாதி
எதிர்க்கும் மதம்
எதிர்க்கும் கருத்துக்கள்

படைப்பின் நிறைகள்
படைப்பின் குறைகள்
படைப்பின் தத்துவங்கள்

கேட்ட செய்திகள்
பார்த்த புகைப்படங்கள்
நெஞ்சை வருடிய திரைப் படங்கள்
மற்றும் சில...

இது தாண்டி
யாரேனும் எழுதுங்கள்
தயவு செய்து...!

எனக்குத்தான் தோன்றவில்லை
உங்களுக்கும் கூடவா....!

-

நண்பர்களே, தங்களின் மேலான கருத்தை பின்னூட்டத்தில் பதியுங்கள்.
பிடித்திருந்தால் உங்கள் ஓட்டை பதிவு செய்யுங்கள்.

-

எதற்காக இந்த வாழ்க்கை!

எதற்கு இந்த வாழ்க்கை!

ஆசைப்பட்டு கேட்ட பொம்மை
கைக்கு கிடைக்காமல்
அதோ பாரு
யாரு வர்றாங்கன்னு
என்று சொல்லி
திசை திருப்பப் படுவதர்க்காகவா

பக்கத்து வீட்டு
பையனைப் போல்
துணி வேண்டும் என்று கேட்டதர்ற்கு
அது ஆயி என்று சொல்லி
கவனம் கவரப்படுவதர்க்காகவா

மிதிவண்டி இருந்தால் தான்
பள்ளிக்கு செல்வேன் என்று சொல்லி
அடம் பிடித்ததற்காக
மிதி வாங்குவதர்க்காகவா

பள்ளிப் படிப்பை தாண்டி
கல்லூரி செல்ல
வசதி இல்லாததை நினைத்து
கண்ணீர் வடிக்கவா

இளமை காலம் தாண்டியும்
பொருளாதாரம் நிமித்தமாக
எதிர் பார்த்த நேரத்தில்
ஆகாத கல்யாணத்தை நினைத்து
மனம் வாடவா

தாமதமாய் அமைந்த மனைவி
எதிர்பார்ப்பை நிறைவு
செய்யாதது கண்டு
மனம் புளுங்கவா

பெற்ற மக்களை
என் பால்யம் போல் அல்லாமல்
வசதியாய் வாழ வைக்க
முடியாததை நினைத்து
சுவற்றில் முட்டிக் கொள்ளவா

அல்லது என் வாழ்க்கை போலவே
எனது பிள்ளைகளின் வாழ்க்கை
மறு சுழற்சியாய்
அமைந்து விட்டதை நினத்து
மனம் புளுங்கவா

எதற்காக இந்த வாழ்க்கை!

-

நண்பர்களே, தங்களின் மேலான கருத்தை பின்னூட்டத்தில் பதியுங்கள்.
பிடித்திருந்தால் உங்கள் ஓட்டை பதிவு செய்யுங்கள்.

-

Friday, April 16, 2010

என் காதலியின் பெயர்

முதல் முறை உன்னைப் பார்த்தேன்
பேருந்து நிறுத்தத்தில்
உன்முகம் என்னுள் பதிந்து போனது

மறுமுறை காண்பேனா...
விடை தெரியாது...

விடை தெரியா கேள்விக்கு
விளக்க உரையாய்
வந்து சேர்ந்தாய்
எனது அலுவலகத்திற்க்கே

நீ வந்ததில் இருந்து
என் வேலை நாட்களில்
விடுப்பு என்பதே இல்லாமல்
பதிவு செய்து கொண்டது
என் அலுவலக
வருகை பதிவேடு

எதிரில் இருந்த
கணினி திரையை
மறைத்தது உன் பிம்பம்
என் எண்ணத்தில்

என் எண்ணத்தை
ஊடறுத்த உன் பிம்பத்தை
காண சுற்றி அலைந்தேன்
இதுவரை அறிந்திராத
அலுவலக இடுக்குகளிலும்

கண்டு கொண்டேன்
நீ இருக்கும் இடத்தை
அதோடு என் வேலை மறந்தேன்
என்னை மறந்தேன்

நீ அலுவலகம் வரும் நேரம்
நானும் வந்தேன்
நீ உணவருந்தும் வேளை
நானும் அருந்தினேன்
நீ விடுப்பில் இருந்தால்
நான் நெருப்பில் இருந்தேன்

வாரத்தில் ஏழு நாட்களும்
வேலை செய்யா அலுவலகத்தை
மனதுள் திட்டினேன்

காரணமின்றி உன் இருப்பிடத்தை
ஒவ்வொரு நாளும்
பலமுறை கடந்தேன்

அதற்க்கான காரணம் உனக்கு தெரித்திருக்க
நியாயம் இல்லை
ஏனெனில் நீ இதுவரை
என்னை பார்த்ததில்லை

நினைத்திருந்தேன்
வாழ் நாளின் ஆகச் சிறந்த
தருணங்கள்
கவிதைகள் என்னை ஆட்கொண்ட
நேரமென்று

அதை பொய்யாக்கிச் சென்றது
உன் பெயரை தெரிந்து கொண்ட பொழுது.

-

நண்பர்களே, தங்களின் மேலான கருத்தை பின்னூட்டத்தில் பதியுங்கள்.
பிடித்திருந்தால் உங்கள் ஓட்டை பதிவு செய்யுங்கள்.

-

Tuesday, April 13, 2010

வாழ்க என் தாயகம்!

பாதி உலர்ந்துவிட்ட இரத்தம் கைகளில் பிசுபிசுத்தது. அதை துடைக்கக் கூட தோன்றாமல் எதிரில் இருந்த காட்சிகளை வெறித்தபடி நின்றுகொண்டிருக்கிறேன். அங்கங்கே சிதறிக் கிடக்கும் குண்டுகளால் துளைக்கப்பட்ட முழுமையான, முழுமை அல்லாத உடல்கள். சற்று முன் துப்பாக்கியை தூக்கிக் கொண்டு எதிராளியை கொல்வதற்கு ஓடிய கைகளும் கால்களும் புற்களின் இடையே சிதறடிக்கப் பட்டு கிடக்கின்றன.

காலையில் இருந்து நிற்காமல் துப்பாக்கியையும் குண்டுகளையும் சுமந்து கொண்டு ஓடியதில் கால்கள் வலிக்க ஆரம்பித்தது. ஓடும் பொழுது மரத்தில் இடித்துக் கொண்டதால் ஏற்பட்ட இடது தோள் சிராய்ப்பு ஏறிய ஆரம்பித்தது. அயர்ச்சியில் அப்படியே கால்கள் மடிய அமர்ந்து விட்டேன்.

"எதற்காக  நான் இங்கு வந்தேன்? எதற்காக இத்தனை பேரை கொன்றேன்? இன்னும் எத்தனை பேரை கொல்ல வேண்டும்? நான் உயிருடன் வீடு திரும்புவேனா? அல்லது கொல்லப்படுவேனா? எப்பொழுது யாரால் கொல்லப்படுவேன்?" மனதில் இடைவிடாமல் கேள்விகள் எழுந்தன.

என்னைப்போல் இத்தனை மரணங்களை மிக அருகில் பார்த்தவர்கள் ரொம்பவும் குறைவாகவே இருப்பார்கள். என்னுடன் ஓடிவந்து கொண்டிருந்த நண்பன் கண்ணெதிரே சீறிவந்த தோட்டாவினால் துளைக்கப் பட்டு இரத்தம் கொப்பளிக்க விழுந்து இறந்தான்.

அதே தோட்டா, இன்னும் சற்று தள்ளி இந்தப் பக்கம் பாய்ந்திருந்தால் இந்நேரம் நான் உயிருடன் இருந்திருக்க மாட்டேன். இன்னும் எத்தனை முறை இதுபோல் தப்பிக்க நேரிடும் என்று தெரியவில்லை.

இறந்துவிட்ட நண்பனின் மனைவி, குழந்தைகள், பெற்றோர்கள் எல்லோரும் இவன் அடுத்த விடுமுறைக்கு மீண்டும் ஊருக்கு வருவான் என்று எதிர்பார்த்து காத்திருப்பார்கள். இந்த மரணச் செய்தி நிச்சயம் அவர்கள் வாழ்க்கையை புரட்டி போட்டுவிடும்.

தூரத்தில் கூடாரத்தில் யாரோ வலியில் கதறும் சத்தம் கேட்கிறது. தனது உடலின் எந்த உறுப்பை இழந்ததற்காக இந்த கதறல் என்று தெரியவில்லை. என்னால் அதற்க்கு மேல் அங்கு அமர்ந்திருக்கப் பிடிக்கவில்லை.

சற்று தூரம் நடக்க வேண்டும் போல் இருந்தது. கால் வலியை பொறுத்துக் கொண்டு மெல்ல எழுந்து நடக்க ஆரம்பித்தேன்.

இதுவே ஊரில் இருந்தால் சிறு காயத்திற்கும் மருத்துவமனை சென்று கட்டுப் போட்டு குடும்பமே நாளெல்லாம் அருகில் இருந்து பார்த்துக் கொள்ளும். இங்கு மருந்தும் அரவணைப்பும் பகிர்ந்து தான் அளிக்கப் படும்.

நான் எனது நாட்டுக்காக போரிடுகிறேன் என்ற உணர்வு என்னை இயங்கச் செய்கிறது. நாட்டிற்காக என் உயிர் கொடுக்கவும் தயங்கவில்லை.

ஆனால்....

எதிரி நாடாக இருந்தாலும் என் முன் துப்பாக்கி தூக்கி நிற்பவனும் சக மனிதன். இரத்தமும் உணர்ச்சியும் நிறைந்த ஒரு மனிதன். இறந்துவிட்ட என் நண்பனைப் போலவே அவனுக்கும் குடும்பம் இருக்கும். அவனது குழந்தைகள் 'தன் அப்பா திரும்பி  வருவார்' என்று காத்திருக்கும். தன் மகனை காண்பதற்காக அவனது பெற்றோர்கள் வழிமேல் விழி வைத்திருப்பார்கள். பட்டாளத்தானின் மனைவி என்ற பெருமையையும், மீண்டும் எப்பொழுது பார்ப்போம் என்ற ஏக்கத்தையும் சுமந்துகொண்டு நாட்களை தள்ளிக் கொண்டிருக்கும் மனைவி இருப்பாள்.

நான் இயக்கப் போகும் துப்பாக்கியின் ஒரு குண்டு அவன் குடும்பத்தின் அத்தனை பேரின் கனவுகளையும் அழித்து விடும் என்ற நினைவு விரல்களை நடுங்கச் செய்கிறது.ஆனால் அவன் துப்பாக்கி குண்டுதான் என் நண்பனை கொன்றது என்பதே என் தயக்கங்களை போக்க போதுமானதாக இருந்தது.

ஆம், பெரும்பாலும் நாட்டுப் பற்று இந்த இடத்தில் இரண்டாம் பட்சமாகவே இருக்கிறது. சற்று முன் என்னுடன் உரையாடிய நண்பன் இப்பொழுது உயிருடன் இல்லாமல் போனதற்கு என் எதிரில் இருப்பவனே காரணம் என்ற உண்மையே உயிரை துச்சமாக மதித்து முன்னேற வைக்கும் முதல் காரணம்.

எனக்கும் அவர்களுக்கும் எந்த முன் பகையும் கிடையாது. அவர்களை எனக்கு யார் என்று கூட தெரியாது. இதற்க்கு முன்னாள் நான் அவர்களை பார்த்தது கூட கிடையாது. ஆனாலும் கண்டவுடன் சுட்டுக் கொல்லும் அளவுக்கு வெறியேற்றி அனுப்பி வைக்கப் பட்டுள்ளேன். அப்படி வெறியேற்றியது இந்த நாட்டின் தவறா? அல்லது என்னுள் அதை அனுமதித்தது என் தவறா?

போர்க்களம் அல்லாது வேறு இடத்தில் அவர்களைப் பார்த்திருப்பின், என் தாயகம் வந்திருக்கும் விருந்தினர்கள் என்று ஒரு புன்னகை சிந்தி வரவேற்றிருப்பேன். இங்கு இரத்தம் சிந்த வேண்டியிருக்கிறது.

எதற்காக இந்தப் போர்? நாட்டின் மக்களை காப்பாற்றுவதர்க்காகவா? என்னுடன் பணி புரிபவன் என் நண்பன். நாட்டிற்குள் நான் சாப்பிடும் சோற்றுக்காக உழைத்துக் கொண்டிருப்பவன் என் நண்பன். ஒரு நண்பனை பலி கொடுத்து இன்னொரு நண்பனை காப்பாற்றவா?

இப்பொழுது எனக்கு கால் வழி மறந்து போனது. மனது வலிக்கிறது.

மனதில் ஏறிய வலி கண்களில் கண்ணீராய் வெளிப்பட்டு பார்வையை மறைக்கிறது.

தினமும் எனக்கு உணவு கொடுத்து உடற்பயிச்சி ஆயுதப் பயிற்சி கொடுத்து "போய் அந்த நாட்டு ராணுவ வீரர்களை கொன்று வா" என்று இந்த அரசாங்கம் என்னை அனுப்பி வைத்திருக்கிறது.

இந்தப் போரில் நான் இறந்து விட்டால் அடுத்து வரும் அரசு நிகழ்ச்சியில் என் மனைவியிடம் பதக்கம் கொடுப்பார்கள். என் கணவன் நாட்டுக்காக உயிர் கொடுத்தான் என்று பெருமைப் பட்டுக் கொள்வால்தான். ஆனால், "அப்பாவை பாக்கணும் போல இருக்கு" என்று சொல்லும் குழந்தைக்கு என்ன கூறி அறுதல் படுத்துவாள்.

போர் நின்ற பின் இந்த இடத்தில் வந்து தேடித் பாருங்கள். யாரோ ஒரு ராணுவ வீரன் தன் மனைவியின், குழந்தையின், பெற்றோரின் ஞாபகமாக வைத்திருந்த பொருட்கள் கிடைக்கலாம். அது அவன் உயிர் துறந்த பொழுது சிதறி விழுந்ததாக இருக்கும். முடிந்தால் அதை அவன் குடும்பத்திடம் சேர்த்து விடுங்கள்.

அதோ, குண்டு வெடித்த வெளிச்சத்தில் எதிரி நாட்டு ராணுவ வீரர்கள் முன்னேறி வருவது தெரிகிறது. என் உடம்பு மீண்டும் முறுக்கேறுகிறது, இப்பொழுது என் கண்களைப் பார்க்காதீர்கள்,அதில் தெரியும் கொலை வெறி உங்களைப் பயம் கொள்ளச் செய்யும். என் தாயகம் காக்க மீண்டும் முன்னேறுகிறேன்.

ஒருவேளை உயிருடன் திரும்பினால் மீண்டும் சந்திப்போம்.
வாழ்க என் தாயகம்!
-

நண்பர்களே, தங்களின் மேலான கருத்தை பின்னூட்டத்தில் பதியுங்கள்.
பிடித்திருந்தால் உங்கள் ஓட்டை பதிவு செய்யுங்கள். 
-

Monday, April 12, 2010

அதிர்வுகள் - 5 (பிகரு மக்கா பிகரு)

என்னத்த சொல்றது, நம்ம தலை எழுத்தோ என்னவோ எந்த பிகர பாக்க ஆரம்பிச்சாலும் அடுத்த சில மாசத்துல அதுக்கு கல்யாணம் ஆயிடுது. ரெண்டு மாசத்துக்கு முன்னாடி பாத்த பொண்ணுக்கு போன மாசம் கல்யாணம், போன மாசம் பாத்தா பொண்ணுக்கு இந்தமாசம் கல்யாணம்.

இப்படியே போய்கிட்டு இருந்தா கல்யாணம் ஆகாத பொண்ணுகளை எல்லாம் கூட்டி வந்து கொஞ்ச நாளைக்கு சைட் அடரா மக்கா, அவளுக்கு கல்யாணம் ஆகட்டுமுன்னு சொல்லுவாங்க போல.

ஏங்க, எனக்கு மட்டும் தான் இப்படி நடக்குதா இல்ல உங்களுக்கும் இந்த மாதிரி அனுபவம் இருக்குதா. இருந்தா சொல்லுங்களே அத கேட்டாவது கொஞ்சம் மனச ஆத்திக்கறேன்.

***********************************************

கொஞ்ச நாளைக்கு முன்னாடி இப்படித்தான் சும்மா இருக்காம ஏ மூக்க நானே ஓடசுகிட்டேன். நம்ம நண்பர் அனுப்பிய பாட்டு ரொம்ப நல்லாருந்துது. ஒரு நாப்பது தடவையாவது கேட்டிருப்பேன்.

கேட்டு ரசிசுபுட்டு பேசாம இருக்காம நமக்கு தெரிஞ்ச பொண்ணுகிட்ட போயி ஒரு நல்ல பாட்டு இருக்குது கேக்கரையான்னு ரொம்ம்ம்ப பாசமா கேட்டேன்.

அதுக்கு அது சொல்லுச்சு "இப்போ நா ரொம்ப பிசியா இருக்கேன் அப்புறம் கேக்கிறேன்".

அட இதே ஒரு பையன் சொல்லிருந்தா சரிடா மச்சான்னு வந்திருப்பேன். ஆனா நம்ம கேட்டும் ஒரு பொண்ணு இப்படி சொல்லிடுச்சேன்னு வந்தது பாருங்க ஒரு கோவம்!

அதுக்கப்புறம் எத்தனையோ தடவை அந்த பொண்ணு கேட்டும் அந்த பாட்ட கேக்கறதுக்கு  தரவே இல்லையே. நம்ம தன்மானத்த எப்படிங்க விட்டு கொடுக்கறது. ஏங்க நா செஞ்சது சரிதானுங்களே?

அதே பாட்ட நம்ப நண்பர்கள் கிட்டயும் கேளுங்கன்னு கொடுத்தேன். 'ம்' னு சொன்னதோட சரி. அப்புறம் திரும்பிக்கூட பாக்கல.

இதுல யாருங்க பரவால்ல ரகம்? நீங்களே சொல்லுங்க.

***********************************************

ஒரு சின்ன கவுத மாதிரி


நாம்நோக்கிய பிகர் பிறரை நோக்கின்
அப்பிறரை தூக்கி விடு.

***********************************************

 ரைட்டு.
கொல வெறி உங்க கண்ணுல தெரியுது.
அபீட்டு.....

 ***********************************************

நண்பர்களே, தங்களின் மேலான கருத்தை பின்னூட்டத்தில் பதியுங்கள்.
பிடித்திருந்தால் உங்கள் ஓட்டை பதிவு செய்யுங்கள். 
-

Friday, April 9, 2010

அடியே சிறுக்கி..! - என் கிராமத்து காதல்

அடியே சிறுக்கி..!

உனக்காகத்தா இன்னும் உயிர் வாழுரண்டி
உன்ன நெனைச்சே சாகாம சாகுரண்டி

இழந்த பழம் பறிக்க நீ எடுத்து எரிஞ்ச கல்லு
எம்மேலபட்டு மனசு ஆயிடுச்சு நூறு சில்லு

குட்டி குட்டி மேகம் போல வெடுசிருக்கு காடெல்லாம் பருத்தி
அத பறிக்க வரும்போது நானும் வந்தேனே நிதம் உன்ன துரத்தி

ஏ மனசு பூரா நெரஞ்சுபுட்டே கண்ணான கண்ணாட்டி
அப்பவே முடிவாச்சு நீதா எம் பொண்டாட்டி

மெல்ல மெல்ல ஏத்துகிட்ட நீயும் என் காதல
அதனால கேட்டுப்புட்டேன் உயரின் இசை என் காதால

மச்சான்னு ஒருதடவ கூப்பிட்டுட்டு மறஞ்சுகிட்ட
திரும்பி பாத்து காணாம  நா ஒரு நிமிஷம் மாஞ்சுபுட்ட

புளிய தோப்புக்குள்ள குடுத்தியே ஆசையா ஒரு முத்தம்
அத நெனைச்சு மனசுக்குள்ள பாட்டுதா நித்தம்

வரப்பு மேல கால வெச்சு  ஏறும் போது உன் பாதம்
பணித்தண்ணி வழுக்கிவிட போகுதடி இது மார்கழி மாதம்

கம்மா தண்ணி எல்லாம் கர புரண்டு ஓடுதடி
சிறுக்கி உன் நினைப்பால எம் மனசு வாடுதடி

அழகான பொண்ணப் பார்த்தா யாருக்கும் ஆச வரும்
என்னோட காதலுக்கு இப்படியா மோசம் வரும் 

சுண்டி இழுக்குதடி உன் கண்டாங்கி புடவ கட்டு
மொத்த ஊரும் கெலம்புதடி உன்னைத்தா பொண்ணு கேட்டு

எத்தன பேர் வந்தாலும் நான்தாண்டி உன் மச்சான்
இதை தானே பிரம்மனும் ஏட்டில எழுதி வெச்சான்

மத்தவங்க சொல்லக்கேட்டு என்ன மறந்திடாத சின்னப்பொண்ணு
மறந்திட்டா ஏ ஒடம்ப திங்கத்தா காத்திருக்கு இந்த மண்ணு

உனக்காகத்தா இன்னும் உயிர் வாழுரண்டி
உன்ன நெனைச்சே சாகாம சாகுரண்டி

----------------------------------------

இந்த கிராமத்து காதல பல பேரு படிச்சு பாக்க
மனசு வெச்சு பதியுங்க உங்க வாக்க

-

Tuesday, April 6, 2010

வாழ்க்கை சவாரி !

கண் விழித்த போது
நீல நிற குதிரை ஒன்று
அழகு காட்டி நின்றது

என் விருப்பம் கேட்காமலே
என்னை ஏற்றிக் கொண்டு
நடக்கத் தொடங்கியது

ஏறியது குதிரை என்று தெரியாமலே
துவங்கியதென் பயணம்

 ஏறிய குதிரையின் சூட்சுமம் புரிவதர்க்குள்
பயண தூரத்தின்
கால் பங்கை கடந்திருதேன்

அப்போதும் சூட்சமம் மட்டுமே புரிந்திருந்தது
 பிரயாணத்தின் பாதை புரியவில்லை

எனது பாதையில் குறுக்கும்
நெடுக்குமாக பல குதிரைகள்
அலைந்து  கொண்டிருந்தன

சில குதிரைகள்
என்னை இடறிச் சென்றன
சில என்னை
உடன் அழைத்துச் சென்றன

எனக்கு என் குதிரையில்
பயணிக்க பிடிக்கவேயில்லை

மற்ற குதிரைகள் என்னை வசீகரித்தன
இருந்தபோதும் நான் பயணிப்பதை
நிறுத்தவே இல்லை

ஒரு கட்டத்தில் எனது குதிரை
துள்ளலுடன் பயணிக்க ஆரம்பித்தது
எனது பாதை மறந்து

குதிரை சில நேரம்
சிலிர்த்துக் கொன்டது
தாகத்தில் அலைந்தது
வெறி கொண்டு ஓடியது

மாறிய பாதையை
மாற்ற முடியவில்லை
நிதானித்த பின்பு

கிடைத்த பாதையில்
தொற்றிக் கொண்டன
சுமைகளும்

சுகமாய் இருந்த சுமைகள்
நடக்க நடக்க
எரிச்சலூட்டின

உதற நினைத்தாலும்
சுமைகள் குதிரையை
விடுவதாய் இல்லை

சுமைகளாலும்
நெடுந்தூர பயனத்தாலும்
இதோ எனது குதிரை
 களைத்து விட்டது

தனது பயணத்தை
முடித்துக் கொள்ள
விரும்புகிறது

நானும் இறங்கிக் கொள்கிறேன்
அடுத்த குதிரையில் எனது
பயணத்தை எதிர்நோக்கி!


நண்பர்களே, தங்களின் மேலான கருத்தை பின்னூட்டத்தில் பதியுங்கள்.
பிடித்திருந்தால் உங்கள் ஓட்டை பதிவு செய்யுங்கள்.


-

Saturday, April 3, 2010

நான் வேறு எதுவாகவேணும் பிறந்திருக்கலாம்!

நான் நானாய் பிறந்ததற்குப் பதில்
வேறு எதுவாகவேணும் பிறந்திருக்கலாம்.

ஒரு பறவையாய்
கல்லாய்
மரமாய்
காகிதமாய்

ஆனால்...

பறவையாய் இருப்பின்
மாமிச பட்சிணிகளால்
அகோரமாய் அடித்து உண்ணப்படலாம்

கல்லாய் இருப்பின்
கலவரத்தில் யாரோ ஒருவரின்
மண்டையப் பிளக்க
உபயோகப் படுத்தப் படலாம்

மரமாய் இருப்பின்
பற்றி எறியும் தீ நாக்குகள்
சிறு குழந்தைகளின்
தசையை தீண்ட
காரணமாய் இருந்து விடலாம்

காகிதமாய் இருப்பின்
ஏதோ ஒரு ஊரின், நாட்டின்
நாட்டு மக்களின்
கருப்பு பக்கங்களைப் பற்றி
எழுத பயன்படுத்தப் படலாம்

இப்படி வேறு எதுவாக பிறப்பினும்
அதிலும் சில சங்கடங்கள்
இருப்பது கண்டு
நான் நானாக பிறந்ததர்க்கே
மகிழ்வுறுகிறேன்.


நண்பர்களே, தங்களின் மேலான கருத்தை பின்னூட்டத்தில் பதியுங்கள்.
பிடித்திருந்தால் உங்கள் ஓட்டை பதிவு செய்யுங்கள்.

-

Thursday, April 1, 2010

அதிர்வுகள் - 4 (பச்சோந்தி மனசு)

நேற்று முன்தினம் ஈரோடு பெட்ரோல் பங்க் ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்தேன், ரயில்வே ஸ்டேசன் செல்வதற்காக.அப்பொழுது இரவு ஒன்பது மணி.மழை பெய்து கொண்டிருந்தது.

கிட்டத்தட்ட ஒரு பத்து நிமிடம் நின்றிருப்பேன். மழையும் நின்று விட்டது. மூன்று பஸ்கள் கடந்து சென்றன, எதுவுமே நிற்கவில்லை. மனதிற்குள் அந்த பஸ் டிரைவர்களை திட்டிக் கொண்டே நின்றிருந்தேன். ஒரு பஸ் என்னையும் மதித்து நின்று ஏற்றிக் கொண்டது. மகிழ்ச்சி.

"ட்ரைவர்னா இப்படி இருக்கணும். பயணிகளின் அவசரம் புரிந்து நடந்து கொள்ளும் ஆட்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்" நினைத்துக் கொண்டேன்.

மேலும் "ஏன் இந்த டிரைவரைப் போல் எல்லோரும் இருப்பதில்லை" என்று நினைத்துக்கொண்டே வந்தேன். அந்த டிரைவரின் மேல் மிகுந்த மதிப்பு ஏற்பட்டிருந்தது.

இறங்கும் இடம் வந்தது. பேருந்து நின்றது. இறங்க முயன்ற பொழுது, படியின் கீழ் கால் நனையும் அளவிற்கு மழைத் தண்ணீர். இறங்கினால் செருப்பு நனைந்துவிடும்.

மனதிற்குள் நினைத்துக் கொண்டே இறங்கினேன்.

"டிரைவர் சுத்த கிறுக்கனா இருப்பான் போல, நிருத்தரதுக்கு வேற இடமா இல்ல! எங்கிருந்துதான் வர்றானுகளோ!"


*******************************************

ரயில்வே ஸ்டேஷன் வந்தாயிற்று. ட்ரெயின் வர இன்னும் சற்று நேரம் இருந்தது,

பிளாட்போர்ம்மில் இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டு வருவோர் போவோரினை பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தேன். எதேட்சியாக எதிரில் இருந்த பெயர்ப் பலகையை படிக்க நேர்ந்தது. அதில் இருந்த வாசகம்

"மாமிச சிற்றுண்டி சாலை"

அசைவ உணவு பழக்கம் உள்ள எனக்கே சற்று அதிர்ச்சியாகத்தான் இருந்தது. அசைவம் சாப்பிட நினைப்பவர்கள் கூட சற்று தங்குவார்கள். அந்த பெயர்ப் பலகையை வேறு மாதிரி வைத்திருக்கலாம், "அசைவ உணவகம்" என்று.

 இப்படிப் பட்ட பெயரை வைக்க யோசித்தவர் யார் என்று தெரியவில்லை!.

*******************************************

ஒரு  சின்ன கவிதை

கை விசிறி
மின் விசிறியை ஏளனமாகப் பார்த்தது
மின்சாரம் இல்லாத போது.

*******************************************

ஒரு  சின்ன ஆசை

கூட்ஸ் வண்டியின் கடைசியில் இணைக்கப் பட்டிருக்கும் பெட்டியில், இரவில், முழு நிலவன்று தனிமையில் அமர்ந்து பிரயாணிக்க வேண்டும்.

*******************************************

(அதிரும்...)

நண்பர்களே, தங்களின் மேலான கருத்தை பின்னூட்டத்தில் பதியுங்கள்.
பிடித்திருந்தால் உங்கள் ஓட்டை பதிவு செய்யுங்கள்.

-

Friday, March 26, 2010

இரசிக்க வைக்கும் பாடல் வரிகள்

"பொய்யிலாமல் காதல் இல்லை, பொய்யைச் சொல்லி காதல் வளர்த்தேன்". இந்த வரிகள் 'சொல்லாயோ சோலைக்கிளி' என்ற பாட்டின் இடையே வரும்.

 கவிதைக்கு பொய் அழகு என்பது எல்லோரும் அறிந்ததே. ஆனால் காதலுக்கும் பொய் அழகு என்ற கருத்தை நம்மிடையே விட்டுச் செல்லும் வரிகள் இவை. காதலில் உண்மையும் நம்பிக்கையும் தான் முக்கியம் என்பது நமது கூற்று. அனால் அதை கட்டுடைக்கும் வரிகள் இவை.

****

 'சட்டப்படி ஆம்பளைக்கு ஒத்த இடம்தானே, தவளைக்கும் பொம்பளைக்கும் ரெண்டு இடந்தானே'. 'கத்தாழ காட்டு வழி' என்னும் பாட்டில் இடம் பெற்ற வரி.

தவளை நீரிலும் நிலத்திலும் வாழும், அதற்கென்று ஒரு தனி இடம் கிடையாது.
பிறந்த வீடு விட்டு புகுந்த வீடு செல்லும் பெண்ணை தவளையோடு ஒப்பிட்டிருப்பார் கவிஞர். தவளை தண்ணீருக்கும் நிலத்திற்கும் மாறி மாறி தாவும். பெண்ணும், பிறந்த வீடு புகுந்த வீடு இரண்டையும் விட்டுக் கொடுக்காமல் அலைபாயும் மனதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார்.

****

புத்தம் புது பூமி வேண்டும்' என்ற பாடலில் அனைத்து வரிகளும் மனதை கொள்ளை கொள்ளும்.  அதில்நான் மிகவும் ரசித்தது

'சொந்த ஆகாயம் வேண்டும்
ஜோடி நிலவொன்று வேண்டும்
நெற்றி வேர்க்கின்ற போது
அந்த நிலவில் மழை பெய்ய வேண்டும்'.

சொந்தமாக ஆகாயமே கிடைத்தாலும் ஜோடியாக நிலவும் வேண்டும் என்ற கற்பனை சிலிர்க்க வைக்கிறது. காற்றே இல்லாத நிலவில் தேவையான போது மழையும் வேண்டும் என்பது சற்று அதிகப்படியோ! கவிதைக்கு பொய் அழகு என்பதை மீண்டும் நிரூபிக்கும் கற்பனை.

****

'மெய்யாக நீ என்னை விரும்பாத போதும்
பொய் ஒன்று சொல் கண்ணே என் ஜீவன் வாழும்'

காதலன் தன் காதலியிடம் "நீ விரும்பாவிட்டாலும் விரும்புவதாக ஒரு பொய் சொன்னாலே போதும் அதில் என் உயிர் வாழும்" என்று கூறுவது நம் உணர்வுகளை த(எ)ட்டிப் பார்க்கும் வரிகள். இந்த இடத்தில் முதலில் நான் குறிப்பிட்டிருந்த பாடலின் வரிகளை நினைவு கொள்கிறேன். இங்கும் பொய் என்பது காதலை வாழ வைக்கும் ஒரு நிஜமாகவே இருக்கிறது.

****

'மனதில் ஓசைகள்
இதழில் மெளனங்கள்
ஏன் என்று கேளுங்கள்'

இந்த வரிகளை யாரும் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. 'மெளனமான நேரம்' பாடலில் வரும் இவ்வரிகள் வெறும் எழுத்தோ அல்லது  ஓசையோ மட்டும் அல்ல. மனதில் எத்தனை ஆசைகள் இருந்தாலும் இதழில் மெளனம் சாதிக்கும் ஒருவன் இந்த மெளனத்தின் காரணம் என்ன என்று கேளுங்கள் என்று நம்மிடம் மன்றாடுவதாய் அமைந்திருக்கிறது. எழுதிய கவிஞனின் கற்பனை தொட முடியாத தூரம்.

****

'பெண் கன்று பசு தேடி பார்க்கின்ற வேளை
அம்மான்னு சொல்லவும் அதிகாரம் இல்லை
என் விதி அப்போதே தெரிஞ்சிருந்தாலே
கற்பத்தில் நானே கலைந்திருப்பேனே'

ஒரு பெண் தன் பிறப்பைப் பற்றி சுய பச்சாதாபம் கொண்டு வெளியிடும் வேதனையை இதைவிட அழகாக சொல்ல முடியுமா என்று தெரியவில்லை.

இன்னும் இதுபோன்று பல பாடல் வரிகளை சொல்லிக் கொண்டே செல்லலாம். ஆனால் நான் ஒருவனே சொல்வதைக் காட்டிலும் அவரவர்க்கு தோன்றும்(விரும்பும்) பாடல் வரிகளை எழுதினால் பலரும் இரசிப்பார்கள் என்று எண்ணுகிறேன்.

அதனால் இது ஒரு தொடர் பதிவாக இருப்பின் பல நயம் மிகு வரிகள் அனைவரையும் சென்றடையும் என்ற நோக்கத்தோடு எனக்கு தெரிந்த, தெரியாத அனைவரையும் அழைக்கிறேன்.

இதற்க்கு நிபந்தனைகள் எதுவும் இல்லை. வேண்டுமானால் சேர்த்துக்கொள்ளலாம்.

நான்  பதிவுலகிற்கு புதிது என்பதால் எனக்கு வெகு சிலரே பரிட்சயம். இப்பதிவின் மூலம் தொடர நான் அழைப்பது

மதுரை சரவணன்
சபரி
மர்மயோகி
ஜெய்லானி
மங்குனி அமைச்சர்
ஜீவன்சிவம்
SUREஷ்
தேவன் மாயம்
வால் பையன்
ரோஸ்விக்

நண்பர்களே, பதிவை தொடருங்கள். நீங்கள் இரசித்த பாடல் வரிகளை மற்றவரும் இரசிக்கும் வண்ணம் பகிருங்கள்.


நண்பர்களே, தங்களின் மேலான கருத்தை பின்னூட்டத்தில் பதியுங்கள்.
பிடித்திருந்தால் உங்கள் ஓட்டை பதிவு செய்யுங்கள்.

-

Wednesday, March 24, 2010

கல்யாணம் ஆனவங்க இதை கண்டிப்பா படிங்க

பேச்சுலர்ஸ் அப்படின்னாலே எதோ  தெனைக்கும் தண்ணி அடிக்கிறவங்க, எங்க பொண்ணுகளைப் பாத்தாலும் உடனே ஓடிப் போய் கையப் புடிச்சு இழுத்துருவாங்க அப்படிங்கற அளவிலேயே பாக்கறீங்களே!. நாலு பசங்க ஒன்னா சேர்ந்து தங்கினாலே அவங்கள ஏதோ தீவிரவாதியப் பாக்கிற மாதிரிதானே பாக்கிறீங்க.

பேச்சுலர்ஸ் போய் வீடு வேணும்னு  கேட்டா வீட்டுக்காரங்க ஒரு லுக்கு விடுவாங்க பாருங்க, அடுத்த பேச்சுக்கு இடமே இல்லாம திரும்பி நடக்க வேண்டிய பார்வை அது.

அப்படியே வீடு கொடுத்தாலும் அந்த பசங்க மேல ஒரு கண்ணுவெச்சுகிட்டே இருப்பாங்க.

இந்த நிலைமையில ஒரு பேச்சுலர் எந்த தப்பும் பண்ணாம பக்கத்து வீட்டு பொண்ண டாவடிச்சதா அவன் மேல ஒரு குற்றம் சுமத்தப் படுது. அப்போ அவன அக்கம் பக்கத்தில் இருக்கிறவங்க எல்லாம் சுத்தி நின்னு கேள்வி மேல கேள்வியா கேக்கிறாங்க.

அந்த சூழ்நிலைய பத்தி மாட்டிக்கிட்ட பையன் மனம் வெறுத்து சொல்றதுதான் கீழ்க்கண்ட தொடர்ச்சி.

---------------------------------------------------------------

கண்மூடி நிதானித்து பதிலுரைக்க காலம் தாழ்த்திய இடைவெளியை நிரப்பும் பொருட்டு எழுந்த பேச்சுக்கள் மனதின் திண்மையை ஆட்டிப் பார்க்கினும் நிதானம் இழக்காமல் நிற்பவனின் பொறுமையை சோதனைச் சாலை எலி என நினைப்பவர்களை மன்னிக்கும் மகாத்மா அல்ல நான்.

நீங்களும்  இதற்க்கு ஒரு நாள் ஆட்படின் செய்வதறியாது நிலைகுலைந்து சூடேறும் இரத்தத்தை ருசிக்கும் ஓநாய் கூட்டத்தின் வம்சம் அல்ல நான்.

தன் சுற்றம் அல்லாத பெண்ணை கண்டு பேருவக்கும் செயல்தனை புறம்  ஒதுக்கும் சொற்ப மனிதர்களை அற்பமாய் பார்க்கும் ஈனம் என்னுள் குடிவர அனுமதித்ததில்லை.

தனித்திருப்பினும் தனக்கான கொள்கையினை பிறர்க்கென தளர்திக்கொள்ளும் மனிதர்களை தன்னோடு இணைத்துக்கொள்ளும் தாழ்ந்தவன் அல்ல நான்.

மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையை கொளுத்துவோம் என்னும் கூற்றிக்கு பக்கம் நின்று கூக்குரலிடும் தன்மையினை எனக்குள்ளே வளர்த்துக் கொண்டவன் நான்.

அயல்நாட்டு மோகத்தின் பால் ஈர்ப்பு கொண்டு என்னையன் வள்ளுவன் கூறிச்சென்ற பிறன்மனை நோக்காப் பேராண்மை என்னும் முதுமொழியினை தகர்க்கும் கூட்டத்தில் சேர்ந்திட்டேன் அல்லன் நான்.

இப்படிப்  பலவாறு எடுத்துரைத்தும் உரைத்த கருத்தினை கண்டுகொள்ளாது தன் இருப்பை காட்டிக் கொள்ள முயலும் கூட்டத்தினுள் மாட்டிகொண்ட கதைகளத்தின் கருப்பொருள் நான்.

 ---------------------------------------------------------------

என்னங்க, இவனுக்கு என்னமோ ஆயிடுச்சுன்னு பரிதாபமா பாக்கிறது புரியுது.
ஏதோ புதுசா முயற்சி செஞ்சு பாக்கலாமுன்னுதான் இப்படி. நீங்க எதையும் மனசில் வெச்சுகாதிங்க.


நண்பர்களே, தங்களின் மேலான கருத்தை பின்னூட்டத்தில் பதியுங்கள்.
பிடித்திருந்தால் உங்கள் ஓட்டை பதிவு செய்யுங்கள். 


-

Tuesday, March 23, 2010

சூழ்நிலைக் கைதிகள்

நாங்கள் சூழ்நிலைக் கைதிகள்.

நடைபாதையில் தூங்கும்
மனிதர்களை இறக்கத்துடன் பார்த்து
கால் படாமல் ஒதுங்கிச் செல்வோம் 
ஆனால் அவர்களுக்கு
உறைவிடம் தரமாட்டோம்.
ஏனெனில், நாங்கள் சூழ்நிலைக் கைதிகள்.

பிச்சை எடுக்கும் சிறுமிக்கு
ஒத்தை ரூபாய் பிசையிட்டு
கர்ணனாய் நினைத்து நகர்ந்துவிடுவோம்
அச்சிறுமியின் துயரப் பின்புலம் பற்றி
எண்ணமாட்டோம்
ஏனெனில், நாங்கள் சூழ்நிலைக் கைதிகள்.

பேருந்துப் பயணத்தில்
நிற்கும் பெரியவருக்கு
யாராவது இடம் கொடுப்பார்களா என்று
சுற்றிலும் பார்த்துவிட்டு
உறங்குவது போல் கண்மூடிக் கொள்வோம்
எமது இருக்கையில்
ஏனெனில், நாங்கள் சூழ்நிலைக் கைதிகள்.

சாலை விதிகளை மீறும்
வாகன ஓட்டிகளை
மனதிற்குள் திட்டிக் கொள்வோம்
எங்கள் வாகனங்களை
நிறுத்தமில்லா இடங்களிலும் நிறுத்துவோம்
ஏனெனில், நாங்கள் சூழ்நிலைக் கைதிகள்.

 வெளிநாடுகளின் தூய்மையைப் பற்றி
மாய்ந்து மாய்ந்து பேசுவோம்
ஆனால் எம் நாட்டில்
கூச்சப் படாமல்  பொது இடங்களை
அசுத்தம் செய்வோம்
ஏனெனில், நாங்கள் சூழ்நிலைக் கைதிகள்.

கண்ணெதிரே அநியாயம் நடப்பினும்
பாராமுகமாய் இருந்து விட்டு
சமுதாயத்தை திட்டுவோம்
ஏனெனில், நாங்கள் சூழ்நிலைக் கைதிகள்.

நண்பர்களே, தங்களின் மேலான கருத்தை பின்னூட்டத்தில் பதியுங்கள்.
பிடித்திருந்தால் உங்கள் ஓட்டை பதிவு செய்யுங்கள்.
-

Monday, March 22, 2010

கிராமத்து பேருந்து

கிராமங்களில் உள்ள பேருந்துகளில் பிரயாணம் செய்வது ஒரு இனிமையான அனுபவம். நகரத்தில் உள்ள டவுன் பஸ் போல் பரபரப்போ ஏறி இறங்க அடிதடியோ இருக்காது. எந்தெந்த கிராமங்களின் வழியாக செல்கிறதோ அந்த ஊர்களில் எல்லாம் அந்த பஸ் ஒரு நீண்ட நாள் நண்பனைப் போலவே நடத்தப்படும்.

சிறிது  நாட்களுக்கு முன்பு கிராமத்தில் உள்ள நண்பனின் வீட்டிற்கு சென்றேன். அவர்களுடைய ஊருக்கு அதிகம் பஸ் வசதி கிடையாது. ஒரு நாளைக்கு இரண்டோ அல்லது மூன்று முறையோதான் பஸ் சென்று வருகிறது.

அந்த கிராமத்து மனிதர்களைப் போலவே பேருந்துகளும் அதிக ஆர்பாட்டம் இல்லாமல் எளிமையாகவே இருக்கிறது. புஷ் பாக் சீட்டுகள் கிடையாது, காதுகள் அதிரும் D.T.S. ஒலி கிடையாது. ஆனால் திறந்த ஜன்னல் வழியே நம் கேசம் கலைக்க ஓடி வரும் தூய்மையான காற்று உண்டு.

பேருந்து ஓட்டுனரும் நடத்துனரும் பயணிகளிடம் உறவினர்களைப் போல் குடும்ப நலன் விசாரிக்கின்றனர். அவர்களுக்குள் பயணி என்ற உறவை தாண்டி ஒரு நட்பு எப்பொழுதும் இழையோடுகிறது.

பயணிகளை ஏற்றி இறக்குவதில் அவசரம் காட்டுவதில்லை. நிறுத்தி நிதானமாக இறக்கிவிட்டுச் செல்கின்றனர், அதனால் ஓடும் பஸ்ஸில் ஏறவோ இறங்கவோ தேவை இருப்பதில்லை. அதுமட்டுமல்லாமல் பெரும்பாலும் படிக்கட்டுகளில் தொங்கிக் கொண்டு வர நடத்துனர் அனுமதிப்பதில்லை. அந்த அளவுக்கு கூட்டமும் இருப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு பயணி பஸ்ஸில் ஏறிய பிறகு பயணச்  சீட்டிற்கு காசு குறைவாக இருக்கிறது என்றார். அதற்க்கு நடத்துனர் சரி அடுத்த முறை  வரும் பொழுது கொடுங்கள் என்று கூறினார். அவர்கள் மேல் உள்ள நம்பிக்கை அது.

பயணிகளோடு ஆடு கோழிகளும் பயணிப்பதை பார்க்க முடிகிறது. நடத்துனருக்கு தெரியாமல் பைக்குள் வைத்து கோழியை கொண்டு செல்வது ஆங்காங்கே நடப்பதுதான். ஆனால் ஒருவர் ஒரு ஆட்டுக் குட்டியை தூக்கிக் கொண்டு பஸ்ஸில் ஏறினார். அது பற்றி யாரும் கவலைப்படவும் இல்லை, அசூயை கொள்ளவும் இல்லை. சாதாரண விஷயமாகவே எடுத்துக்கொள்ளப் படுகிறது.

சாலையின் குறுக்கே ஆடு மாடுகளை ஒட்டி வந்தாலும் ஓட்டுனர் ஏக வசனத்தில் திட்டுவதில்லை. சில சமயங்களில் நடத்துனர் இறங்கிச் சென்று ஓரமாக விரட்டுவதும் உண்டாம்.

இதை எல்லாம் பார்க்கும் பொழுது, நகரத்து பேருந்துகளில் நடக்கும் இடிபாடுகளும், வசவு மொழிகளும் எண்ணத்தில் உரசிச் செல்கிறது.

கிராமத்துப் பேருந்துகளில் என்ன  ஒரு பிரச்சனை, சில சமயங்களில் வெற்றிலை எச்சிலை கொஞ்சமும் யோசிக்காமல் ஜன்னலுக்கு வெளியே தலையை நீட்டி துப்புகிறார்கள். காற்றில் நம் மேல் படாமல் உஷாராக இருக்க வேண்டி இருக்கிறது.

உண்மையில் பல கிராமங்களில், பக்கத்து நகரத்திற்கு செல்லும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு பஸ் ஒரு காதல் வாகனம். அவர்களுக்கு சந்தித்துக்கொள்ள  வேறு பாதுகாப்பான இடம் கிடைப்பது பெரும் கடினம். வேறு எங்கேயாவது தனித்து நின்று பேசினால் அவர்கள் வீடு சென்று சேர்வதற்கு முன் அவர்களின் விஷயம் வீட்டிற்கு சென்றுவிடும். கல்லூரியிலும் இதற்க்கு வாய்புகள் குறைவு. பஸ்ஸிலும் இந்தப் பிரச்சனை இருந்தாலும் அவர்களுக்குள்ளான தகவல் பரிமாற்றம் சற்று எளிது.

இடம்  பிடிப்பதற்காக யாரும் அடித்துப் பிடித்துக் கொண்டு ஏறுவதில்லை. நிதானமாகவே ஏறுகிறார்கள், முண்டியடித்துக் கொண்டு உட்காராமல் அடுத்தவர்களுக்கு உட்கார வழி விடுவதை காண முடிகிறது.

பல பஸ்களில் இரண்டு மூன்று சீட்டுகள் அகற்றப் பட்டிருக்கின்றன. அந்த இடங்களில் சந்தைக்கு காய்கறி மூட்டையை அடுக்கி எடுத்துச் செல்கிறார்கள்.

நகரத்தைப் போன்று சாலைகளில் செல்வோரை பீதியடைய வைக்கும் வகையில் வேகமாக செல்வதில்லை. பஸ்ஸை ஓட்டுவதில் ஒரு நிதானம் இருக்கிறது.


குண்டும்  குழியுமான சாலைகளில் பேருந்து ஆடி ஆடி செல்வது தேர் ஊர்வலம் செல்வது போலத்தான் இருக்கிறது. பல கிராமங்களின் நகரத் தொடர்புக்கு இது போன்ற சாலைகளும் அதில் அவ்வப்பொழுது வந்து செல்லும் பஸ்களும் மட்டுமே இருக்கிறது.

நண்பர்களே, உங்கள் ஓட்டை பதிவு செய்யுங்கள்.
-

Friday, March 19, 2010

அதிர்வுகள் - 2 (யு.டி.வி. பிந்தாஸ் - ஒரு அதிர்ச்சி தகவல் )

நண்பர்களே, நேற்று இரவு எதேச்சையாக "யு.டி.வி. பிந்தாஸ்" என்ற சேனல் பார்க்க நேர்ந்தது. அதில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த ஒரு நிகழ்ச்சி 'இமோசனல் அத்யாசார்'. காதலர்களுக்கு இடையே உள்ள காதலை பரிசோதிக்கும் ஒரு நிகழ்ச்சி.

"ஒரு காதலனோ அல்லது காதலியோ தன் காதலன்/காதலி மீது சந்தேகம் கொள்ளும் பட்சத்தில், இந்த நிகழ்ச்சியின் மூலம் தெளிவு படுத்திக்கொள்ளலாம்".

அதாவது, காதலிக்கும் ஒரு பெண்ணிற்கு தன் காதலன் மீது சந்தேகம் வந்தால் இந்த நிகழ்ச்சி தொடர்பாளரை தொடர்பு கொள்ள வேண்டும். அவர்கள், தாங்கள் நியமித்த பெண்ணின்/ஆணின்  மூலம் அந்த காதலரை சந்திக்கச் செய்வர். இதில் பெரும்பாலும் சந்தேகம் கொள்ளும் நபர் பெண்ணாகவே இருப்பது குறிப்பிடத்தக்கது.

பெரும்பான்மையை  உதாரணமாக எடுத்துக்கொள்வோம். ஒரு பெண் தன் காதலனின் மீது சந்தேகம் கொண்டோ அல்லது ஒரு விளையாட்டாகவோ இந்த நிகழ்ச்சியின் மூலம் தொடர்பு கொண்டு சோதிக்க விரும்புகிறாள். முதலில் அந்த சேனல் நியமித்த பெண் அந்த வாலிபரை தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு பூங்கா, ஷாப்பிங் மால் (படுக்கை அறை வரை கூட) என்று ஏதாவது ஒரு இடத்திற்கு வரச் செய்கின்றனர்.  பின்பு மெல்ல மெல்ல பேச்சு கொடுத்து, தன் அழகை பிரதானமாகக் கொண்டு தன்பால் ஈர்க்கின்றார் அந்தப் பெண்.

அதை உண்மை என்று நம்பும் அந்த வாலிபர் அப்பெண்ணின் பேச்சிற்கு இணங்க அவள் கூப்பிட்ட இடத்திற்கு செல்ல முனைகிறார். இங்கு ஒன்றை குறிப்பிட விரும்புகிறேன், எந்த ஒரு மனிதனையும் தன் வசம் இழக்க வைப்பது சூழ்நிலையே. ஏற்க மறுத்தாலும் நாம் எல்லோரும் சூழ்நிலை கைதிகள் என்பது மறுக்க முடியாதது.

பெண்ணின் பேச்சு மற்றும் செய்கை அந்த வாலிபரின் உணர்சிகளை தூண்டுவதாகவே இருக்கும் (அந்த வாலிபரை மட்டும் அல்ல யாராய் இருப்பினும்). அவரும் தன்னிலை மறந்து சில்மிசங்களில் ஈடுபட ஆரம்பிப்பார். இதை அனைத்தும் மறைந்திருந்து கேமிரா மூலம் பத்தி செய்வார்கள். அது மட்டுமில்லாமல் இதை நேரடி ஒளிபரப்பாக அந்த பையனை காதலிக்கும் பெண்ணிற்கும் காண்பிப்பார்கள்.

இதை பார்த்துக்கொண்டிருக்கும் பெண் தன் காதலன் இன்னொரு பெண்ணிடம் நெருக்கமாக இருப்பதைப் பார்த்து கோபம் கொள்வாள். அதுமட்டுமில்லாமல் தன் காதலனும் அந்தச் சேனலால் நியமிக்கப்பட்ட பெண்ணும் ஒன்றாக இருக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்லப் படுவாள்.

திடீரென்று முளைத்த கேமிரா மற்றும் ஆட்களைப் பார்த்து அந்த பையன் அதிர்ச்சி அடைவான். இவ்வாறு ஒரு சூழ்நிலையில் மாட்டிகொண்டோமே என்ற படபடப்பில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் உணர்ச்சி மேலீட்டில் செயல்படத் துவங்குவான்.  அப்பொழுது அந்த பெண் மற்றும் காதலன் எவ்வாறான நடவடிக்கையில் ஈடுபடுகிறார்கள் என்றும் பதிவு செய்வார்கள்.


ஒரு காதலர்களுக்கு இடையே செயற்கையான நிகழ்வின் மூலம் பிரிவை ஏற்படுத்தி அவர்களுக்குள் என்ன மாதிரியான வாக்குவாதம் நடைபெறுகிறது என்று பதிவு செய்யப்படுகிறது.


பின்பு அதை தங்களின் 'இமோசனல் அத்யாசார்' நிகழ்ச்சியின் மூலம் ஒளிபரப்புவார்கள். இது அந்த சேனலின் டி.ஆர்.பி. ரேட்டை உயர்த்திக்கொள்ள உதவும் ஒரு வியாபாரத்தந்திரம். அவர்களின் வியாபாரத்திற்க்காக ஒரு காதலர்களின் காதலை கேலிக்கூத்துக்கு உள்ளாக்குகிறார்கள்.



இப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சியை ஒளிபரப்ப இந்தியச் சட்டம் எவ்வாறு அனுமதிக்கிறது. இதற்க்கு சட்டவியலில் தடை செய்ய எந்த ஒரு பிரிவும் இல்லையா?.


இதில் காதலனோ காதலியோ அவர்களுக்குள் இருக்கும் சந்தேகத்தை நிவர்த்தி செய்துகொள்ள, ஒரு நபர் இப்படிப்பட்ட பொது ஊடகத்தை தேர்ந்தெடுத்தாலும் அதில் சம்பத்தப்பட்ட அடுத்த நபரின் அனுமதி இல்லாமல் அவர் வேண்டாம் என்று மறுத்த பின்பும் டி.வி.யில் ஒளிபரப்புவது அடாவடித்தனமில்லையா?.


இவ்வாறான நிகழ்ச்சிகளைப் பார்த்து அதை ஊக்குவிக்கும் நபர்கள் இருக்கும் வரை இது போன்ற சேனல்களுக்கு கொண்டாட்டம்தான்.

ஒரு நடன நிகழ்ச்சியின் மூலம் நடனக் கலையை ஊக்குவிக்கலாம், பாட்டு போட்டி நடத்துவதன் மூலம் இளம் பாடகர்களின் திறமையை வெளிச்சமிட்டு காட்டலாம். இது போன்று எத்தனையோ ஆக்கப் பூர்வமான நிகழ்ச்சிகள் இருப்பினும், இது போன்றதொரு நிகழ்ச்சியின் மூலம் மக்களுக்கு என்ன மாதிரியான பயன் கிடைக்கும் என்று தெரியவில்லை.


அதுமட்டுமில்லாது, இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற காதலர்கள் அதன் பின்பு என்ன மாதிரியான முடிவு எடுக்கிறார்கள் என்பதை பற்றி யாரும் யோசிப்பதாய் தெரியவில்லை.


இது பற்றி தங்களின் கருத்தை பதிவு செய்யவும்.

--------------------------------------------------------------------

திரு.எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுக்கு நன்றி

நான் கேட்டுக்கொண்டதர்க்காக என் பதிவுகளைப் படித்து நிறை குறைகளை சுட்டிக் காட்டியதோடு ஆலோசனையும் வழங்கிய திரு.எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

--------------------------------------------------------------------

ஒரு சின்ன கவிதை

காதலும் காற்றும் ஒன்றா
ஆம் என்கிறது
என் சுவாசம்

--------------------------------------------------------------------

(அதிரும்...)

பிடிச்சிருந்தா ஒரு ஒட்டு குத்திட்டு அப்படியே நம்மள பாலோ பண்ணுங்க!

-

Wednesday, March 17, 2010

அதிர்வுகள் - 1

20-20 கிரிகெட் ஆரம்பித்து விட்டது, இனி உயிரே போனாலும் மேட்ச் பார்க்காமல் இருக்க முடியாது. அதென்னவோ தெரியலைங்க இந்த கிரிகெட் மட்டும் ஆரம்பிச்சுட்டா பக்கத்தில உக்காந்திருக்கிறது பொண்டாட்டியா இல்ல அவ சக்கலத்தியான்னு கூட தெரியறது இல்ல. என்ன கருமாந்திரம் புடிச்ச விளையாட்டோ!

கிரிகெட் பாக்கிற ஒவ்வொரு ஆளையும் புடிச்சு உங்க அம்மா அப்பாவோட பிறந்த தேதி என்னன்னு கேட்டா எத்தன பேரு விட்டத்த பாப்பாங்கன்னு தெரியல. ஆனா 2005 ல டெண்டுல்கர் எத்தன ரன்னுன்னு கேட்டா மூச்சு விடாம அத பத்தி அரை மணி நேரம் பேசுவாங்க.

சரி விடுங்க இத பத்தி அதிகம் பேசாம இருக்கிறது ரொம்ப நல்லது. நா எனக்கு சொன்னே!

------------------------------------------------------------------

"ச்சே, என்ன கொடும மச்சி இது. காலைல ஆபீஸ் வந்தா யாருமே ஒழுக்கமா வேலையைப் பாக்கிறது கிடையாது. பக்கத்து ஆளுகிட்ட நாயம், கிளுகிளுப்பான படத்தோட ஈமெயில் ஏதாவது வந்திருக்குதான்னு பாக்கிறது, இன்னைக்கு யார் யாரு என்னென்ன டிரஸ் போட்டிருக்காங்கன்னு அப்படியே ஒரு நோட்டம். மொத்தத்துல இவங்க எல்லாம் வேலையே செய்ய மாட்டங்க போல இருக்குது."

"ம்"

"இப்போ மணி பன்னிரண்டு, பத்து மணிக்கு வந்த ஆளுங்க இதுவரைக்கும் வேலைய ஆரம்பிக்கல. நம்ம ஒன்னும் உழைச்சு ஓடா தேய வேணாம், எதோ கொடுக்கிற சம்பலத்துக்காகவாவது வேலை செய்யனுமில்ல?"

"ம்"

"இன்னும் கொஞ்ச நேரத்துல சாப்பட்ட கொட்டிக்க கிளம்பிருவாங்க"

"வாய் கிழிய பேசுறியே காலைல இருந்து நீ என்ன பண்ணுனே?"

"வந்ததிலிருந்து எப்படி எப்படியோ பிட்டப் போட்டும் அந்தப் பொண்ணு மடங்க மாட்டேங்குது மச்சி. ஏதாவது செய்யணும் மச்சி!"

!!!???

------------------------------------------------------------------

ஒரு சின்ன கவிதை

மற்றவர்கள் முன்
என்னிடம் பிச்சை கேட்கும் சிறுவன்
மதில்மேல் பூனையாய்
மனது

------------------------------------------------------------------

(அதிரும்...)

ஒரு ஓட்ட குத்திட்டு அப்படியே நம்மள பாலோ பண்ணுங்க!

-

Tuesday, March 16, 2010

தனிமை எனக்கொரு போதி மரம்

எப்போதேனும், ஒரு நாள் முழுவதும் தனிமையில் இருந்து பார்த்திருக்கிறீர்களா? தனிமை தரும் அனுபவத்தை உணர்ந்ததுண்டா? தனிமையை யாரும் அவ்வளவாக விரும்புவதில்லை, ஆனால் நாம் விரும்பா விட்டாலும் சில நேரங்களில் அது நம்மை தேடி வந்து விடுகிறது.

ஆள் அரவமற்ற இடத்தில் தான் தனிமை என்றில்லை, இரைச்சலான பேருந்து பயணத்தில் அருகில் இருப்பவர்கள் என்னே பேசிக்கொண்டு இருக்கிறார்கள் என்பது கூட தெரியாமல் ஜன்னல் வழி காட்சிகளை மவுனமாக பார்த்துக்கொண்டு வருவோமே, அதுவும் ஒருவித தனிமைதான்.

நான் எந்த இடத்தில் இருந்தாலும் எனக்கான தனிமை எப்பொழுதும் என்னுடன்தான் இருக்கிறது அதை கவனிக்க பலநேரம் நான்தான் மறந்து விடுகிறேன். சில நேரங்களில் நானும் எனது தனிமையும் மட்டுமே உரையாடிக்கொண்டிருக்கிறோம். ஒரு தாய் தன் குழந்தையை அணைத்துக்கொள்வது போல் தனிமை என்னை தன் கரங்களுக்குள் தழுவிக் கொள்கிறது.

தனிமையை பழகி விட்டால் அது ஒரு விதமான மயக்கம், தியானம். நம்மை சுற்றி இருக்கும் காற்று வெளியில் தனிமையும் காற்றோடு கலந்து நம்மை சுற்றிக்கொண்டேதான் இருக்கிறது.தனிமையில் இருக்கும் பொழுது மனதில் எண்ணங்கள் பலவாறு பீறிட்டுக் கிளம்பும், சில நேரம் எண்ணக் கூடாததும்.

தனிமையின் இருப்பை கண்டுகொள்ள மறுக்கிறோம். சில நேரங்களில் தனிமையை மறுக்க என்னவெல்லாம் செய்ய வேண்டி இருக்கிறது, நண்பர்களோடு பேசி, தொலைக்காட்சி பார்த்து, வண்டி எடுத்துக்கொண்டு ஊரைச் சுற்றி இப்படி எத்தனையோ.

ஒரு நாள் மதிய வேலை, புறநகர். அலுவலகத்துக்குச் செல்ல பேருந்தை எதிர்நோக்கி ஆட்கள் அற்ற நிழற்குடையின் கீழ் நின்று கொண்டிருந்தேன். சாலை, வாகனப் போக்குவரத்து எதுவும் இல்லாமல் வெயிலும் தனிமையும் மட்டுமே நிறைந்திருந்தது. சாலையோர மரம் ஒன்று யாரோ ஒருவரின் வரவுக்காக காத்திருப்பது போலவே இருந்தது. ஆனால் உண்மையில் அந்த மரம் யார் வந்தாலும் போனாலும் கண்டுகொள்வதே இல்லை போலவும் இருந்தது.

அதன் எதிர்புறம் யாராலோ , எப்பொழுதோ, எதற்காகவோ கொண்டுவந்து போடப்பட்ட கல் ஒன்று, நூற்றாண்டு கடந்த மவுனத்தில் தன்னை ஆழ்த்திக்கொண்டு எது பற்றியும் கண்டுகொள்ளாமல் இருந்தது. பல வருடங்களுக்கு முன் அதன் தோற்றம் நிச்சயம் வேறு மாதிரி இருந்திருக்கும். இன்று இருக்கும் அதன் உருவத்தைப் பெற காரணம் என்னவாக இருக்கும்.

கல்லைப் பற்றிய எண்ணத்தைக் கலைத்து எங்கிருந்தோ வந்த பட்டாம்பூச்சி ஒன்று நிழற்குடைக்குள் வந்து சற்று நேரம் அங்கும் இங்கும் வட்டம் போட்டது. பின்பு அங்கிருந்த தடுப்பு கம்பியின் மீது அமர்ந்து சிறகுகளை அசைத்தபடியே இருந்தது. இந்த காட்சிகளை பார்த்து கொண்டே தனிமை கொஞ்சம் கொஞ்சமாக என்னை தனக்குள் இழுத்துக் கொண்டது தெரியாமல் நின்று கொண்டிருந்தேன்.

தூரத்தில் பேருந்து வருவது தெரிந்ததும் தனிமை என்னிடம் இருந்து மெல்ல கையசைத்து விடைபெற்றுக்கொண்டது. சில சமயங்களில் என்னையும் அறியாமல் இதுபோல் தனிமை கிடைப்பதுண்டு, சில வேளைகளில் நானாக தேடிச் செல்வதும் உண்டு.

மழையோ, அதிக காற்றோ அற்ற வெறுமையான இரவு. நிலவும், மேகங்களும் இல்லாத வானத்தில் நட்சத்திரங்கள் மட்டும். மாடி முகப்பில் அமர்ந்து இருந்தேன், அந்த பின்னிரவு வேளையில் அமைதியை போர்த்தியபடி மரங்கள் உறங்கிக் கொண்டிருந்தன. தூரத்தில் செல்போன் டவரின் விளக்கு ஒளிர்ந்து கொண்டிருந்தது சிகப்பு வண்ண நட்சத்திரமாய்.

தனிமை ஒரு காதலியைப் போல் ஓடி வந்து ஒட்டிக் கொண்டு மெல்ல மெல்ல என்னுள் இறங்குவதை உணர முடிந்தது. சில்வண்டுகள் தங்களுக்குள் பேசிக்கொள்வது தனிமையின் ஒரு அங்கமாகவே இருந்தது. அவைகளின் சத்தம் தனிமையை கலைப்பதர்க்குப் பதில் மேலும் மேலும் தனிமைக்குள் ஆழ்த்திக்கொண்டே போனது.

இரவுப் பறவை ஒன்று சத்தம் இல்லாமல் எதோ ஒரு இடத்தை நோக்கி பயணித்தது. இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கும் நேரத்தில் படுத்து உறகலாம் என்று ஒரு எண்ணம் வந்தாலும், தூங்கிவிட்டால் இது போன்ற ஒரு தனிமையை இழக்க நேரிடும் என்ற உண்மை தூக்கத்தை விரட்டி அடித்தது.

நேரம் செல்லச் செல்ல தனிமை எனும் அந்த அழகான உணர்வுக்குள் நான் மொத்தமாக தொலைந்து விட்டிருப்பது தெரிந்தது. கிழக்கில் சூரியன் வருவதற்கான ஆயத்தங்கள் தெரிந்தன. சாலையில் மனிதர்களின் நடமாட்டம் தெரிய ஆரம்பித்தது. இம்முறை நான் மெல்ல கையசைத்து தனிமையிலிருந்து விடைபெற்றுக்கொண்டேன்.

தனிமை பல வேளைகளில் போதி மரமாகவே இருக்கிறது. அதன் நிழலில் சற்று நேரம் இளைப்பாறிப் பாருங்கள்.


-

Saturday, March 13, 2010

வலைப் பதிவரும் ஒரு பத்திரிகையாளரே

பதிவர்கள் எல்லோருக்கும் வணக்கம்.

நாட்டில் நடக்கும் எத்தனையோ விஷயங்களைப் பற்றி மக்களுக்கு எடுத்துரைக்கும் மிகப்பெரிய ஒரு ஊடகம் பத்திரிகை. ஆனால் அந்த பத்திரிகையில் எழுதும் வாய்ப்புகள் எழுத நினைக்கும் ஒவ்வொருவருக்கும் கிடைப்பதில்லை. வாய்ப்பு கிடைக்கும் ஒரு சிலரது எழுத்துக்களும் அது எந்தப் பத்திரிகையில் வெளிவருகிறது என்பதைப் பொறுத்தே அச்செய்தி எத்தனை மக்களை சென்றடைய வேண்டும் என்பது நிர்ணயிக்கப்படுகிறது.

இன்று தமிழ் நாட்டில் நடக்கவிருக்கும் சட்டசபை வளாகம் கட்டி முடிக்கப் படாத நிலையில் பகுதி வேலை செட் என்று தமிழ் மக்கள் எத்தனை பேர்களுக்கு தெரியும். இதை நான் எந்த ஒரு பத்திரிகையில் படிப்பதற்கு முன் நம் சக வலைப் பதிவர் மர்மயோகி அவர்களின் பதிவின் மூலம் தெரிந்து கொண்டேன்.

இரண்டு கோடி செலவில் செட் என்பது தமிழ் நாட்டு அரசாங்கத்துக்கு வேண்டுமானால் சாதாரண விசயமாக இருக்கலாம். அரசாங்கமும் அரசியல்வாதிகளும் கோடியில் புரளுபவர்கள் அல்லவா? ஆனால் ஒரு கடைக்கோடி தமிழனுக்கு இரண்டு கோடி என்பது தன் வாழ்நாளிலும் எட்ட முடியாத ஒரு இலக்கு.

ஒரு நாள் கூத்துக்கு மீசையை எடுத்த கதையாக, சற்று நேரம் வந்து போகும் மேலிடத்துக்காக மக்களின் வரிப்பணத்தை இப்படி வாரி இறைப்பது எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாததாகும். அவ்வாறு செலவிடப்படும் பணம் நிரந்திர தீர்வுக்காகவும் அல்ல என்பதுதான் மன வேதனைக்குரியது.

இப்படி ஒன்றிரண்டு விஷயங்கள் மட்டுமல்ல, நாம் படித்தறியாத எத்தனையோ விஷயங்கள் பதிவுகளில் படிக்கப் படாமலே தூங்கிக் கொண்டிருக்கின்றன. பதிவுகளை தேடும் பொழுது எது நமக்கு விருப்பமான ஒன்றோ அதை மட்டுமே தேர்வு செய்து படிப்பது அனைவருக்கும் இயற்கையானதே. ஆனாலும் நம் பதிவர்கள் மறைந்து கிடக்கும் எத்தனையோ விஷயங்களைப் பற்றி எழுதிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

ஒரு ஜனரஞ்சகப் பத்திரிக்கையின் செய்திகள் சென்றடையும் மக்களின் எண்ணிக்கை வேண்டுமானால் அதிகமாக இருக்கலாம். ஆனால் அப்பத்திரிக்கையில் வரும் செய்திகளுக்கு எந்தளவுக்கு நம்பகத்தன்மை இருக்கிறது என்பதை இன்று மக்கள் புரிந்து கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள்.

ஒரு காலத்தில் நன்மதிப்பைப் பெற்றிருந்த , குடும்பத்தில் அனைவரும் படிக்க ஏற்றத்தக்கதாய் இருந்த பத்திரிக்கைகள் இன்று மஞ்சள் பத்திரிக்கைகளுக்கு இணையாக வளம் வர ஆரம்பித்து விட்டன. ஆனால் காலத்தின் கொடுமை இன்னும் அதை குடும்பம் சகிதமாக படித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். இது மக்களின் அறிவுடைமை என்று முழுமையாக கூறிவிட முடியாது, அவர்களின் அறிவு அவ்வாறு மழுங்கடிக்கப் பட்டிருக்கிறது.

பத்திரிகைக்கும் பதிவருக்கும் மிகப்பெரிய வித்யாசம் என்னவென்றால், பத்திரிகையாளரின் செய்தி மக்களால் படிக்கப் பட்டே ஆக வேண்டும். இல்லையெனின் அந்த பத்திரிகையின் வருமானம் குறையும். அது நீடித்தால் அந்த செய்தியாளரின் வேலை பறிபோகும். அதனால், செய்தியில் உண்மையை விடவும் சுவாரஸ்யமே முக்கியமாகிப் போகின்றது. செய்தியின் நம்பகத்தன்மையும் குறைகிறது. ஆனால் பதிவாளருக்கு அப்படிப்பட்ட நிலைமை இல்லை, அவர்கள் பெரும்பாலும் ஆதாய நோக்கோடு எழுதுவதில்லை. தங்கள் கருத்தின் நிலைப்பாட்டை வலியுறுத்தவே தம் எழுத்தின் மூலம் முயற்சிக்கிறார்கள்.

பதிவு என்பது வெறும் கேளிக்கைகளுக்கும் சுய விமர்சனங்களுக்கும் என்பது மாறி இன்று வெகு ஜன உடகங்களும் திரும்பிப் பார்க்கும் வலிமையை பெற்றிருக்கிறது. இது ஒரு நல்ல முன்னேற்றம். ஆனால் பதிவர்களுக்குள்ளும் இருக்கும் போட்டி பொறாமைகள் அதற்கொரு தடைக்கலாகவே இருக்கிறது என்பதை மறுக்க இயலாது. அவர்களது பெரும்பாலான நேரம் தங்களுக்குள் மாற்றி மாற்றி திட்டி எழுதிக்கொள்ளவே செலவிடப்படுகிறது. இது கவலைக்குரிய விசயமாகும்.

பதிவராய் இருப்பதில் இன்னொரு விசேஷம் என்னவென்றால், ஒரு குறிப்பிட்ட விஷயங்களைப் பற்றித்தான் எழுத வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஒரு செய்தியாலருக்குள்ளும் ஒரு கவிஞன் இருக்கலாம். ஒரு கவிஞன் செய்தி கூற விரும்பலாம். இப்படிப்பட்ட வாய்ப்புகள் பதிவாலனுக்கே உள்ள ஒரு வரப்பிரசாதம்.

அதுவே ஒரு பத்திரிகையில் வேலை செய்யும் செய்தியாளர் தனக்கு கொடுக்கப் பட்டிருக்கும் வேலையை மட்டுமே செய்ய முடியும். சினிமா பற்றி செய்தி எழுதும் ஒருவர் தனக்கு கிடைத்த அரசியல் விஷையத்தைப் பற்றி அவ்வளவு எளிதாக எழுதிவிட முடியாது. அரசியல் பற்றி எழுதுபவர் தனக்கு தெரிந்த சினிமா விசயங்களை சுலபமாக பதிவேற்றிவிட முடியாது.

இன்னும் சொல்லப் போனால், ஒரு விதத்தில் பதிவாளர்களின் வேலை அவர்களின் முழு நேரப் பனி அல்ல. இருந்தும் தன்னாலான செய்திகளைத் திரட்டி வெளியிடுகிறார்கள்.

பத்திரிக்கையாளர்களை விட பதிவர்களுக்கு அதிக சுதந்திரம் என்றே சொல்லலாம். தனக்கு கிடைக்கும் செய்திகளை வெளியிட யாரிடமும் சென்று அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை. தான் அளித்த செய்திகள் முழுதும் பதிவேருமா அல்லது பதிப்பாளரின் விருப்பத்திற்க்கேற்ப மாற்றியமைக்கப்படுமா என்று கவலை கொள்ள தேவையில்லை.

ஒரு குறை என்னவெனில், தவறான செய்திகளும் பதிவேற்றப்படும் வாய்ப்புகள் பதிவர்களின் பதிப்புகளில் அதிகம் என்பதை மறுக்க இயலாது. அது பதிவாலரைப் பொறுத்தே அமைக்கிறது.

எழுத்து சுதந்திரம் என்பதை பதிவுகள் எழுத ஆரம்பித்த பின்புதான் உணர்ந்தேன். தனது எண்ணங்களை பிறருடன் பகிர்ந்துகொள்ள நினைக்கும் ஒருவர் அதிக பட்சம் தனது நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ள முடியும். அதுவே ஒரு பதிவாக இருப்பின் முகம் அறியா எத்தனையோ நபர்களிடம் சென்றடைகிறது. அவர்களின் கருத்துக்களை பரிமாறிக்கொள்ள முடிகிறது.

செய்திகள் மட்டுமன்றி, கதைகள் கவிதைகள் புனைவுகள் என்று ஏராளமான விஷயங்கள் பதிவுலகில் கொட்டிக் கிடக்கின்றன. ஒரு பத்திரிகை தவறான செய்தியை வெளியிடுகிறது என்றால் அது பொது மக்களிடையே என்ன மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்துமோ அதே மாதிரியான விளைவுகள் தான் பதிவுகளில் தவறான செய்தி வெளிவரும் போதும் ஏற்ப்படுகிறது.

ஆக, ஒரு பதிவாளர் எந்த விதத்திலும் பத்திரிக்கையாளர்களுக்கு நிகரானவர்கள் என்பது உண்மை.

பதிவுகளை எழுதும், படிக்கும் நண்பர்களே, இன்னும் பல விஷயங்கள் இது போன்று உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். அது தங்களின் பின்னூட்டத்தைப் பொறுத்தே அமையும்.

எனது எழுத்துக்களில், கருத்துக்களில் ஏதேனும் நிறை, பிழை இருப்பின் பின்னூட்டம் இட்டுச் செல்லுங்கள். அது எனது குறைகளை திருத்திக்கொள்ள, நிறைகளை மேலும் வளர்த்துக்கொள்ள பேருதவியாய் இருக்கும்.


-

Tuesday, March 9, 2010

என் வருங்கால காதலிக்கு ஒரு கடிதம் - என்னவளே, நீ எங்கே!

இனியவளே,

யாரென்றே தெரியாத உன்னை முதன் முதலில் சந்திக்கப் போகும் நாளை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருக்கும் ஒருவன் உனக்கு எழுதும் முதல் கடிதம். வெகு நாட்களாக உனக்கு கடிதம் எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன்.

நீ எப்படி இருப்பாய் என்று மனதிற்குள் உன்னைப் பற்றி கற்பனை ஓடிக்கொண்டே இருக்கிறது. எத்தனை நாளைக்குத்தான் உன்னை கற்பனையில் வைத்து கவிதை செய்வது. என் கவிதையின் கருப்பொருளே, என் கவிதை தீரும் முன் ஒரு முறையேனும் உன்னை பார்த்து விட்டால் புதிய கவிதை ஊற்றுகள் பிறக்கும் என் மனதிற்குள்.

பலரும் காதல் நோயினால் அவதிப்படுகையில், காதலியே இல்லாததால் அவதிப்படும் புதிய வகை நோய் பற்றி அறிந்திருக்கிறாயா? உனது நினைவுகளால் என் இரவின் நீளத்தை அதிகப்படுத்தியவளே, இன்னும் எத்தனை நாள்தான் என்னோடு கண்ணாம்பூச்சி ஆடுவாய்.

எந்த இளம்பெண்ணை புதிதாய் பார்த்தாலும் என்னவளாய் இருக்கக் கூடுமோ என்று மனது ஒரு நொடி அதிர்ந்து மீள்கிறது. இந்த நரக வேதனையை இன்னும் எத்தனை நாளைக்கு நான் அனுபவிக்க வேண்டும் என்று நினைக்கிறாய்.

உனக்கு எது பிடிக்கும் என்று தெரியாத நிலையில் இப்பொழுது இருந்தே பரிசுப் பொருட்களை வாங்கி சேமிக்கப் பிடிக்கவில்லை. ஏதோ ஒரு பரிசுப் பொருள் உனக்கு பிடிக்காமல் போனால் எனக்காக அதை ஏற்றுக் கொள்ளும் சங்கடம் உனக்கு வேண்டாம்.

நமது முதற் சந்திப்பு கடந்த காலமா அல்லது எதிர்காலமா? இதற்கு முன் நாம் எங்கேனும் சந்தித்திருக்கலாம், ஓரிரு வார்த்தைகள் பேசியும் இருக்கலாம். அவ்வாறு நடந்திருப்பின் நீதான் என்னவள் என்று அந்த கணம் உணர்த்தாமல் போனது ஏன்?

போனது போகட்டும், இனியாவது எனைத்தேடி வருவாயா.

என் அறை முழுதும் என் நினைவலைகளால் நிரம்பி இருக்கின்றன. அந்த நினைவலைகள் மொத்தமும் நீ!

என் வீட்டுப் பூந்தோட்டம் உன் வரவிற்காக காத்திருக்கின்றன, என் வீட்டு வாயிற்படி உன் பாதம் தொட பாதை பார்த்திருக்கின்றன. அதிக நாட்கள் காக்க வைக்காதே, பாவம் அவைகளுக்குப் புலம்பக்கூட இயலவில்லை.

நாம் பேசப்போகும் காதல் மொழிகளுக்காக வார்த்தைகள் காத்துக் கிடக்கின்றன. நாம் சந்தித்துக் கொள்ளப் போகும் இடங்கள் நம்மை எதிர்பார்த்து ஏகாந்தத்தில் மூழ்கிக் கிடக்கின்றன. நாம் இட்டுக் கொள்ளப் போகும் முத்தங்கள் நமக்காக தவமிருக்கின்றன. நாம் வாழவிருக்கும் வாழ்க்கை நம்மை வரவேற்க ஆவலுடன் இருக்கிறது. நீ என் மனதை கொள்ளை கொள்ளும் நாளுக்காக ஏக்கத்துடன் நானும் காத்திருக்கிறேன். என் மனதிற்கு இனியவளே இனியாவது வந்துவிடு.

பெண்ணே, காலம் காலமாக வாழும் காதலுக்கு நம்மையும் அர்ப்பணிப்போம். காதலை எடுத்துரைக்க ஒரு புது மொழி கண்டு பிடிப்போம். மனித வாழ்வில் காதலின் மகத்துவத்தை மக்களுக்கு எடுத்துரைப்போம். என் மனதிற்கு இனியவளே இனியாவது வந்துவிடு.

இத்தனை காலமும் நம்மை பிரித்து வைத்திருக்கும் அந்த கடவுளிடம் கேட்டே ஆக வேண்டும், "இன்னும் எத்தனை நாட்கள் என்னவளை என்னிடம் இருந்து மறைத்து வைக்கப் போகிறாய்?".

எனது இரசனையின் உச்சமாய் இருக்கப் போகின்றவளே, கேள் என் மனதின் ஓசையை ஒரு நிமிடம் செவி சாய்த்து.

என்னவளே, நீ எங்கே!

கனவுகளில் சுமந்து வந்த
காதலை நிஜமாக்க
என்னவளே, நீ எங்கே!

கலங்கி நிற்கும் வேளையில்
ஆறுதலாய் தோள் சாய
என்னவளே, நீ எங்கே!

காதல் எனும் புத்தகத்தில்
நம் வாழ்கையை
கவிதையாய் எழுதிவிட
என்னவளே, நீ எங்கே!

கணப்பொழுதும்
எனைவிட்டு பிரியாமல்
என் உயிருக்குள் கலந்துவிட
என்னவளே, நீ எங்கே!

உனது நினைவே எனது நினைவுகளாக
உனக்காக காத்திருக்கும்,
உன் அன்பன்....


-