Wednesday, May 25, 2011

நிதர்சனம்


காலையில் கண் விழித்தவுடன்
கனவுகளின் படிமங்களாய்
உந்தன் நினைவுகள்

அவசர அவசரமாய்
என்னை தயார் படுத்திக்கொள்கிறேன்
பேருந்து நிறுத்தத்தில்
உன்னுடனான
கன நேர சந்திப்பிற்காக

யாரும் பார்த்து விடுவார்களோ
என்ற பதைபதைப்பில்
தீண்டிச் செல்லும்
நமது பார்வைகள்

காலம் தாழ்த்தி வந்தாலும்
சீக்கிரம் வந்து விட்டதாக
வாங்கிக் கொள்ளும் சாபத்தைப் பொருட்படுத்தாத
பேருந்து

இப்படியான,
காதல் மலரத் துவங்கிய
காலத்தின் நிகழ்வுகளை
ஞாபகப்படுத்திக் கொண்டுதான் இருக்கிறேன் உரையாடல்களில்

என் முதல் காதல் கடிதங்களை
பிறர் அறியாமல் கிழித்தெறிந்தது
தவிர்த்து!

-