Tuesday, November 23, 2010

சிதறிக்கிடக்கும் கவிதைகள்

சிதறிக்கிடக்கும் கவிதைகள்

உன் கூந்தலில் இருந்து உதிர்ந்த
ஒற்றைப் பூ
நீ கடித்துத் துப்பிய
விரல் நகம்
பதித்துச் சென்ற 
உன் பாதச் சுவடுகள்
என வழியெங்கும் சிதறிக்கிடக்கும்
கவிதைகள்
உறுதிப்படுத்துகின்றன
நீ வந்து சென்றதை.

கருப்பொருள்

ஒரு கவிதை எழுத நினைத்து
ஆரம்ப வரி தேடி அலுத்துவிட்டது
வேறு வழியில்லை
மீண்டும் உன்னிடமே தஞ்சம்.

என்னென்று சொல்ல

வார்த்தைகள் மாறி மாறி நின்று 
களைப்படைந்தன
உன் அழகை
வரையறுக்க முயன்று
காலம் முன்பின்னாக நகர்ந்து
சோர்ந்து போனது
உனக்கு இணையான அழகைத் தேடி
இப்படி இருக்க
உன்னவள் அழகா என்று கேட்பவரிடம்
ஒரு வார்த்தை பதிலாய்
என்னென்று சொல்ல!


-