Monday, March 1, 2010

சிறு வயது ஞாபகம்

சிறு வயதில் அப்பாவுடன் மிதிவண்டியின் பின்னால் அமர்ந்துகொண்டு சாலையின் போக்குவரத்துகளை வேடிக்கை பார்த்தவண்ணம் பள்ளி சென்ற ஞாபகம் இன்னும் மனதில் பசுமையாக இருக்கிறது.

பள்ளி முடிந்து வீடு திரும்பும் வேளையில் மனதிற்குள் ஒரு சந்தோசம் வருமே அதை என்னெவென்று சொல்வது. விடுமுறை நாட்களில் காலையில் எழுந்தவுடன் மனதில் ஒரு பரபரப்பு தொற்றிக்கொள்ளும். காலை உணவு முடிக்கும் வரைதான் வீட்டில் பின்பு மாலைவரை நண்பர்களுடன் எங்காவது விளையாட சென்றுவிடுவேன்.

அனால் இப்பொழுதெல்லாம் விடுமுறை நாட்கள்தான் சோம்பலுடன் விடிகிறது!.

கடைவீதிகளில் எதிர்ப்படும் தெரிந்தவர்களைப் பார்த்து அப்பா சிநேகத்துடன் புன்னகைக்கும் பொழுது ஏன் என்று தெரியாமல் நானும் புன்னகைத்திருக்கிறேன்.

மாலைப் பொழுதுகள் எப்பொழுதும் மனதிற்கு ஒருவித மயக்கத்தை கொடுக்கிறது ஆனால் அதை அனுபவிக்கத்தான் நேரம் கிடைப்பதில்லை இன்று. அந்த வயதில் மாலைப்பொழுதும் நேரமும் கிடைத்தும் அதுபற்றி கவலைப்படாமல் விளையாடி தீர்த்திருக்கிறேன். அதைப் பற்றி சிந்திக்கக்கூடிய வயதும் அல்ல அது.

அன்று எனது ஊருக்குள் அடிக்கடி பார்த்த பல முகங்கள் இன்றும் ஞாபகம் இருக்கிறது. ஆனால் அவர்களையெல்லாம் இப்பொழுது மீண்டும் பார்க்க வாய்ப்பும் இல்லை அவர்கள் என்ன ஆனார்கள் என்றும் தெரியவில்லை.

ஊருக்குள் பிச்சை எடுத்துக்கொண்டு இருக்கும் ஒருவரை தினமும் பார்ப்பேன். அவரைப்பற்றி பள்ளி நண்பர்கள் "அவுரு சாதாரண ஆள் இல்ல! கொலைகாரன பிடிக்கறதுக்காக வேஷம் போட்டுக்கிட்டு வந்திருக்கிற CID" என்று சொல்லக் கேட்டு பயத்தோடு பார்த்திருக்கிறேன். அதுமட்டுமின்றி வீட்டில் பெரியவர்களிடம் அந்த விஷயத்தைச் சொல்லி அதிசயித்திருக்கிறேன். இதுபோல் பலபேர், இப்பொழுது அவர்கள் எல்லாம் ஊரில்தான் இருக்கிறார்களா என்பது கூட தெரியவில்லை.

நீச்சல் கற்றுக்கொடுக்க தாத்தா கிணற்றுக்கு அழைத்துச்செல்லும் பொழுது பயந்துகொண்டு பாதி வழியிலேயே ஓடி வந்துவிடுவேன். கடைசியில் எப்படியோ ஒரு வழியாக கற்றுக்கொண்டபின், காலையில் எழுந்தவுடன் சீக்கிரம் நீச்சலடிக்கப் போகலாம் என்று நச்சரிப்பு ஆரம்பமாகிவிடும். நேரம் போவது கூட தெரியாமல் எந்த கவலையும் இல்லாமல் கிணற்றில் குதித்து விளையாடிய அந்த நாட்கள் எவ்வளவு அற்புதமானது.

அன்று நான் பார்த்த பாதைகள் இன்று தார்ச் சாலையாகி முற்றிலும் மாறிவிட்டது. ஆனாலும் எப்பொழுதாவது அந்த சாலைகளில் செல்லும் பொழுது பழைய பாதையின் தோற்றம் ஒரு நொடியாவது கண்முன் தோன்றி மறைவதை தவிர்க்கமுடியவில்லை.

பால்ய வயதில் இருளைக்கண்டு பயப்படாமல் இருந்தவர்கள் யாரும் இருக்க முடியாது. அப்பொழுதெல்லாம் எட்டு மணியானால் ஊர் அடங்கிவிடும். அதுவும் என் வீடோ சற்று தள்ளி தோட்டத்திற்குள். வீட்டைவிட்டு வெளியே வரவே பயமாக இருக்கும். அப்பொழுதெல்லாம் மனதில், வெளியே கொட்டகையில் கட்டியிருக்கும் ஆட்டுக்குட்டி எப்படி பயம் இல்லாமல் இருளில் இருக்கிறது என்று ஒவ்வொரு இரவும் வியப்பு மேலிடும்.

மழை. அந்த வயது மழையை மட்டும் இரசிப்பதில்லை, மழை நின்றபின் வாசலில் தேங்கி நிற்கும் தண்ணீரிலும் விளையாட வைக்கிறது. வாசலில் தேங்கி நிற்கும் தண்ணீரின் மேல் குதித்து சிதறும் தண்ணீரை பார்ப்பதில் ஓர் அலாதி பிரியம். ஆனால் இப்பொழுது ஒதுங்கிச் செல்லச் சொல்கிறது மனசு.

வயது ஏற ஏற எண்ணங்கள் மாறுவதும், காலத்திற்க்கேற்ப ஊர் மாறுவதும் இயற்க்கை. ஆனாலும் மனது சட்டென்று அதை ஏற்றுக்கொள்வதில்லை.

காலத்தின் பிடிக்குள் நாம்.

1 comment:

  1. padikkumpothe enathu siru vayathu niyapagangal manathai varudina....

    ReplyDelete