Tuesday, June 8, 2010

இரவுப் பறவையின் எச்சம்

தூக்கம் வராமல் புரளும் முன் இரவுகள் தூங்கிக் கொண்டிருக்கும் பல நினைவுகளை தட்டி எழுப்பிவிட்டுச் செல்கின்றன. போர்வைக்குள் கதகதப்பாக படுத்துக் கொண்டு கண்களை மூட, நம்மைப் பார்த்ததும் எழுந்து ஓடி வரும் நாய் குட்டியைப் போல ஆழ்மனத்தின் எண்ணங்கள் ஓடி வருகிறது.

உறக்கம் வராத நேரங்களில் மொட்டை மாடியில் உலவிக் கொண்டிருப்பதுண்டு. சில வேளைகளில் வானத்தைப் பார்த்தபடி படுத்துவிடுவதும் உண்டு. புறநகர்ப் பகுதியில் சற்று உள்ளடங்கிய வீடாதலால் அந்த நேரத்திற்கு வாகனப் போக்குவரத்தோ, இரைச்சலோ இருக்காது.

அந்த இரவும் அமைதியும் மனதை மயிலிறகாய் வருட ஆரம்பித்தது. இதமான வருடலில் பல எண்ணங்கள் துயில் கலைந்தன.

உயரமான இடத்தில் நின்று கொண்டு சமதளப் பரப்பை பார்ப்பது எப்பொழுதுமே பரவசம் அளிக்கக் கூடியது. என் கல்லூரி நாட்களில் அருகில் இருக்கும் சிவன்மலைக்கு தனியே செல்வதுண்டு. 'காங்கயம்' பேருந்து நிலையத்தில் இருந்து ஐந்து கிலோ மீட்டர் இருக்கும்.

அங்கு மலை ஏறுவதற்கு படிகள் இருக்கும். வாகனங்கள் செல்ல தார் சாலையும் இருக்கும். அது மட்டுமன்றி, தார் சாலைகள் அமைப்பதற்கு முன், கோவிலுக்கு யானை செல்ல தனியே ஒரு பாதை இருக்கும். 'யானைப் படி' என்று பெயர். யானையால் படிக்கட்டில் இறங்க முடியாது என்பதால் இந்தச் சாலை. இது கற்களை சாய்வாக பரப்பி படிகள் இல்லாமல் யானை நடந்து வருவதற்கு ஏதுவாக பாதையை அமைத்திருப்பர். நான் மலைக்குப் போகும் சமயங்களில் அந்தச் சாலை அதிகம் பயன்பாடின்றி இருந்தது. கோவில் விசேஷம் எதுவும் இல்லாத தினத்தில் தான் நான் செல்வேன். அதனால் அந்த சமயங்களில் 'யானைப் படி' ஆள் அரவமின்றி இருக்கும். நான் அந்தப் பாதையில் தான் செல்வேன்.

அது ஒரு அற்புதமான அனுபவம். முக்கால்வாசி தூரம் சென்றவுடன் அமர்வதற்கு தோதாக ஒரு பாறை இருக்கும். அங்கு அமர்ந்து கொண்டு பார்த்தால் வெகு தொலைவு சமவெளி தெரியும். அங்கிருந்து பார்க்கும் பொழுது உலகம் தனது இயக்கத்தை நிறுத்திக் கொண்டதைப் போல தோற்றம் அளிக்கும். அடிவாரத்தில் வாகனங்கள் ஊர்வது தெரியும். இன்னும் சற்று தொலைவில் வீடுகள் புள்ளிகளாய் தெரியும். அதையும் தாண்டி காட்சிகள் அசையாத ஓவியங்களாய் தெரியும். அதற்க்கு மேல் புகை மண்டிய தோற்றம் தவிர ஒன்றும் தெரியாது.

சாதாரண இடங்களில் ஒரு குறிப்பிட்ட தொலைவு மட்டுமே காணப் பழகிய கண்களுக்கு, இவ்வளவு தொலைவான காட்சி, முதன் முதல் இரயில் பார்க்கும் சிறுவனின் பிரமிப்பை கொடுக்கிறது. சிறிது நேரம் பார்வை நிலைகொள்ளாமல் அலைகிறது. மொத்தக் காட்சியையும் உள்வாங்கிக் கொள்ள துடிக்கிறது. சற்று நேரத்தில் எங்காவது ஒரு இடத்தில் நிலை குத்தி விடுகிறது.

தொடர்ச்சியான மலை பிரதேசங்கள் இப்படியான ஈர்ப்பை கொடுப்பதில்லை. சுற்றிலும் உயர்ந்தும் தாழ்ந்தும் இருக்கும் மலைகள் பார்வை தூரத்தை குறைக்கின்றது. ஆனால் சமதளப் பரப்பில் இருக்கும் ஒரு சிறிய மலையில் நிற்கும் பொழுது, மலையடிவாரத்தில் இயங்கும் உலகம் ஊமைப் படமாய் காட்சி அளிக்கிறது.

வெயில் காயும் பகல், அவ்வப்பொழுது எங்காவது கேட்கும் குருவி கத்தும் ஓசை, ஆட்கள் அற்ற சுற்றம், சில நூறு அடிகள் கீழே சற்று வறட்சியான பூமி. நண்பனுடன் அந்த மலையில் அமர்ந்திருந்தேன். இதே இடத்தில் பல முறை தனியே அம்ர்ந்திருந்திருக்கிறேன். நேரம் போவது தெரியாமல் வேடிக்கை பர்ர்த்திருக்கிறேன். ஆனால், நண்பனுடன் சென்றிருந்த அன்றோ அதிக நேரம் இருக்க முடியவில்லை. அப்படிப்பட்ட ஒரு இடத்தில் அவனால் அரைமணி நேரத்திற்கு மேலாக உட்கார முடியவில்லை. அவனுடைய நச்சரிப்பால் திரும்பிவிட்டோம்.

பின்பு யோசித்துப் பார்க்கையில், ஏன் அவனால் அங்கு இருக்க முடியவில்லை? தனிமை அவ்வளவு கொடியதா? அந்த அமைதி அவனை பயம் கொள்ளச் செய்ததா? இரைச்சல் தவிர்த்து கொஞ்சம் நேரம் கூட இருக்க முடியாததன் காரணம் என்ன? கேள்விகள் மழைக் குமிழ்களாக தோன்றி மறைந்து கொண்டிருந்தன.

அந்த தனிமையும் அமைதியும் என்னை ஏன் கவர்ந்தது? அன்றாட வாழ்க்கையின் சத்தங்கள் அலுத்துவிட்டதா? எனில், அமைதியே மனதிற்கு நிம்மதியா? பின்பு எதற்காக இத்தனை ஆர்பாட்டங்கள்?

மலையில் தனியே அமர்ந்திருக்கும் பொழுது, அந்த அமைதியும், காட்சியும் எப்பொழுதும் என்னிடம் ஏதோ சொல்ல முனைவதைப் போலவே இருக்கும். எதையோ உணர்த்த துடிப்பதாகவே உணர்வேன். ஆனால், அது என்னவென்று தெளிவடைய முடிந்ததில்லை.

வீசும் காற்றுக்கு தன்னை ஒப்புக் கொடுத்துவிட்டு அதனூடே அலையும் சருகைப் போல் மலையின் அமைதிக்கு என்னை ஒப்புக் கொடுத்துவிட்டு அந்த அமைதியினூடே பயணப் பட்டிருந்த நேரங்கள் கிடைத்தர்க்கரியவை.

ஒரு திருவிழா நாள். மலைக்குச் சென்றிருந்தேன். வழக்கம் போல் யானைப் பாதையில் ஏறி சற்று தூரம் சென்று அமர்ந்து கொண்டேன். மலை அடிவாரத்தில் எங்கு நோக்கிலும் கூட்டம். சிலர் மலையை வளம் வருவதும் உண்டு. தார் சாலையில் வாகனங்கள் வருவதும் போவதுமாக இருந்தன. படிகளிலும் மக்கள் ஏறி இறங்கிக்கொண்டு இருந்தனர்.

ஆனால் அந்த விசேஷ தினத்தில் கூட அத்தனை கூட்டம் இருந்தும் நான்கைந்து பேரைத் தவிர அந்தப் பாதையில் யாரும் வரவில்லை.

தார் சாலை அமைக்கும் முன்னர் விசேஷ தினங்களில் படியில் ஏற சிரமப்படுபவர்கள் இந்த வழியைத்தான் தேர்ந்தெடுத்திருப்பர். விசேஷ நாட்களில் இந்தப் பாதை திருவிழாக் கோலம் பூண்டிருந்திருக்கும். ஆனால் இன்று யாரும் கண்டுகொள்ளப் படாமல் புறக்கணிக்கப் பட்டிருக்கிறது. மக்கள் தனிமையான இடங்களை வெகு சுலபமாக தவிர்த்து விடுகிறார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.

மக்கள் ஏன் சந்தடிகளையும் ஆரவாரத்தையும் விரும்புவதுபோல் தனிமையையும் அமைதியையும் விரும்புவதில்லை என்று வியப்பாகவே இருக்கிறது.

மலைகளைப் பார்க்கும் பொழுது அவைகள் ஆழ்ந்த தியானத்தில் இருப்பது போலவே தோன்றும். அதில் வாழும் உயிர்களின் இயக்கம் அவ்வளவாக வெளியில் தெரிவதில்லை. மலைகளில் அதன் கரடு முரடான நிலத்தில் சுற்றி அலைவது எனக்குள் இருக்கும் ஏதோ ஒரு புரிந்துகொள்ளப்பட முடியாத உணர்வின் வடிகாலாய் இருக்கிறது.

ஏன் இப்படி யாருமே தனிமையை விரும்பாமல் இதுபோன்ற நல்ல இடங்களை தவிர்கிறார்கள் என்ற எனது ஏக்கத்தை சிலர் வேறு மாதிரி தீர்துவைத்தார்கள். ஆம், இப்பொழுதெல்லாம் அந்த 'யானைப் படி' யில் யாரையும் அனுமதிப்பதில்லை. சிலர் அங்கு கும்பலாக வந்து மது அருந்துவதாகவும், பிரச்சனைகளில் ஈடுபடுவதாகவும் தெரிவித்தனர். மிகவும் வருத்தமாக இருந்தது.

அங்கு மலையோடு ஒன்றி புது புது அனுபவங்களை கொடுத்த தனிமை, இன்று இதோ மொட்டை மாடியில் தன்னைப் பற்றிய அனுபவத்தை அதே தனிமை கிளர்ந்தெழச் செய்து கொண்டிருக்கிறது.

நேரம் நழுவிக் கொண்டே இருந்தது. எழுந்துகொள்ள மனம் இல்லை. ஒரு இரவுப் பறவை ஒன்று பறந்தது, எதிர்பாராத விதமாக ஏன் காலின் மேல் எச்சமிட்டுச் சென்றது. எச்சத்தை துடைத்துவிட்டு யோசித்தபொழுது அந்த பறவையின் மேல் கோபம் வரவில்லை மாறாக வேறுமாதிரியான எண்ணங்களை எழுப்பியது. இந்த எச்சத்தைப் போல் நாமும் ஒரு நாள் வாழ்க்கையிலிருந்து துடைத்தெரியப் படுவோம். நாம் வாழ்ந்ததன் அடையாளமாக இந்த பூமியில் எதை விட்டு செல்வது.

சற்று முன் கொண்டிருந்த நினைவும் இந்த எண்ணமும் ஒன்றோடு ஒன்று முடிச்சிட்டுக் கொண்டன.

மலை அழிந்து போகுமா?  மனிதனின் வாழ்க்கையைப் போல் அதுவும் ஒருநாள் இல்லாமல் போகுமா? அதுபோல் அழிந்துவிட்ட மலைகள் எதாவது இருக்கிறதா? அப்படி அழிந்திருந்தால் தனது அடையாளமாக எதை விட்டுச் சென்றது? அதன் அடையாளம் அழியாததா? அல்லது அதுவும் அழியக்கூடியதா? வாழ்ந்து முடிந்த பின் எதற்காக நமக்கான அடையாளம் தேவைப் படுகிறது?

மயிலிறகின் வருடலில் விழிப்புற்ற எண்ணங்கள் இப்பொழுது கேள்விப் புயலால் அலைகழிக்கப் பட்டது. தாகத்தோடு அருந்திக் கொண்டிருக்கும் தண்ணீரை பாதியில் பிடுங்குவதைப் போல மழை தூர ஆரம்பித்து எண்ணங்களை இடைமறித்தது.

பின்னோக்கிய நினைவுகளையும் எழுந்த கேள்விகளையும் அங்கேயே விட்டுவிட்டு படுக்கைக்குத் திரும்பினேன். அவை இன்னும் அங்கேதான் சுற்றிக் கொண்டிருக்கும் என்னை மீண்டும் எதிர்பார்த்து.

-

6 comments:

  1. //மனிதனின் வாழ்க்கையைப் போல் அதுவும் ஒருநாள் இல்லாமல் போகுமா?//
    மலைகளும் உயரும் தாழும் என அறிவியல் சொல்கிறது.

    கவலைப்படாதீர்கள். இவை போன்றவை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத்தான் உருமாற்றம் பெரும்.

    நல்ல மொழி நடை

    ReplyDelete
  2. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சபரி

    ReplyDelete
  3. kathalarkaluku thanimai pidukum.

    ReplyDelete
  4. நல்லாருக்கு பாலமுருகன்

    ReplyDelete
  5. நன்றி மங்குனி அமைச்சர்

    ReplyDelete